தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

30.11.12

ஈசி தமிழ் எழுத்துரு தந்த புதுவை முத்துக்கருப்பன்

ஆசிரியர் முத்துக்கருப்பன்

நம் தமிழ் குறித்த பதிவுகள் அதிகம் வலம்வரத் தொடங்கிய காலகட்டம் தமிழ் எழுதிகள் அதிகம் வெளிவந்த காலகட்டம் என்றால் அது மிகையல்ல.  கணினி வந்த பின்னர் அதன் ஆதிக்கம் அவ்வளவாக எடுபடாமல் இருந்தது.  அதன் ஆதிக்கம் ஓங்கி வளரத்தொடங்கியபோது ஆங்கிலம்தான் கணினியின் முக்கிய மொழியாக விளங்கிற்று.  பல்லோர் ஆங்கிலத்திலேயே பல தகவல்களைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர்.

நாடு கடந்து வாழும் அயலகத் தமிழர்கள் தத்தமது உறவினர்களுடன் உறவாட மொழிக்கருவி (ஆங்கிலம் போன்று) இல்லாதது கண்டு அயர்ந்திருந்தனர்.  ஒரு சில தொழில்நுட்ப அறிவு வாய்க்கப்பெற்றவர்கள் கணினிசார் கல்வியைப் பயின்றவர்கள் அயல்நாடுகளில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் உறவாட ஏற்ற மொழிக்கருவியை அஃதாவது தமிழ் எழுத்துருவை உருவாக்க எண்ணினர்.  அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திரு.கு.கல்யாணசுந்தரம் (நிறுவனர்:மதுரைத் தமிழிலக்கிய மின் தொகுப்புத் திட்டம்).  இவரின் மயிலை எழுத்துரு கண்டுபிடிப்பு பலராலும் பாராட்டும் படியாக இருந்தது.

தமிழ் எழுத்துருக்கள் அப்போது ஒருங்குகுறி வடிவத்தில் அமையப்பெற்றவை அல்ல.  குறிப்பிட்ட ஒரு கணினியில் மட்டும் செயல்படக் கூடியவையாக மட்டுமே அவை இருந்தன.  மற்றொரு கணினியில் எழுத்துருவைக் காண அக்குறிப்பிட்ட எழுத்துருவை ஏற்றம் செய்தல் வேண்டும்.  அப்பொழுதுதான் எழுத்துக்களைத் தெளிவாகக் காண இயலும்.  இந்நிலை மாய்ந்து அனைத்துக் கணினியும் எளிதில் எழுத்துருவை அடையாளங் கண்டு தமிழெழுத்தை வெளிப்படுத்திக்காட்ட  வந்ததே ஒருங்குறி வடிவம்.

இன்று பெரும்பாலான தமிழன்பர்களால் தமிழ் இணைய விரும்பிகளால் பயன்படுத்தப்படுகிற எழுத்துரு ஒருங்குகுறி எழுத்துருவே.  அவ்வகையில் ஒருங்குகுறி எழுத்துருவை உருவாக்கியவர்களுக்கு மகுடம் சூட்டிப் பார்க்க வேண்டுவது நம் கடமையல்லவா?!

புதுச்சேரியை இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வரும் அரசு பள்ளி ஆசிரியர் திரு.முத்துக்கருப்பனின் `ஈசி தமிழ்’என்னும் தமிழ் எழுத்துருவைப் பலருக்கு அறிமுகம் செய்வதே இப்பதிவின் இலக்கு.

முத்துக்கருப்பன் அவர்கள் தற்போது புதுச்சேரியிலுள்ள முத்தியாலுப்பேட்டையில் வசித்து வருகிறார்.  அழகுக் குழந்தை ஒன்றுடனும் ஆருயிர் துணைவியாருடனும் பேணிக்காத்த பெற்றோருடனும் உடன் உறவாடிய உடன்பிறப்புக்களுடனும் தான் செய்த சாதனை தெரியாமல் அமைதியாய் வாழ்ந்து வருகிறார்.  

தமிழில் எழுத வேண்டும் தமிழ் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும் தமிழில் மின்னஞ்சல் செய்ய வேண்டும் என்னுந்தாகமுடையவர்களுக்குத் தான் முத்துக்கருப்பன் தந்த ஈசி தமிழ் மென்பொருளின் அருமை புரியும்.

இவரின் தந்தை திரு.பரமசிவம், தாயார் திருமதி.சந்திரா அம்மையார்.  தந்தை நேருவீதியில் இயங்கிவரும் கடையொன்றில் முக்கியப் பொறுப்பில் இருந்துவருகிறார்.  ஆசிரியர் முத்துக்கருப்பன் சிறுவனாக இருந்தபோதிலே இவர் இப்பொறுப்பில் இருந்திருக்கிறார்.  தாயார் இல்லத்தைக் கட்டிக் காக்கும் குடும்பத் தலைவியாய் தன்கடன் ஆற்றியவர்.  இப்பொழுதும் அப்படித்தான்.

ஆசிரியர் முத்துக்கருப்பன் தன்னுடைய மேனிலைக்கல்வியை வ.உ.சி மேனிலைப் பள்ளியில் பெற்றிருக்கிறார்.  சாதாரண மாணவரோ அல்லது கடைநிலையான மாணவரோ என்று இவரை நினைக்க வேண்டாம்.  தன்னுடைய பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 1200 மதிப்பெண்ணுக்கு 1039 மதிப்பெண்கள் பெற்றவர்.  மேனிலையில் (+2) கணினித் துறையை தன்னுடைய விருப்பப்பாடமாகப் பயின்றார்.  ஆசிரியை திருமதி.அமராவதி அவர்களின் அரும்பெரும் ஊக்கமே இவரை நன்கு சிந்திக்கக் கூடிய மாணவராக ஆக்கியதாகச் சொல்கிறார்.

ஆசிரியை அவர்கள் கொடுத்த ஊக்கத்தின் விளைவாக புதுவை உரோமண்ட் உரோலண்ட் நூலகத்தை ஆசிரியர் முத்துக்கருப்பன் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்.  `ஜி.டபிள்யூ. பேசிக்'  என்னும் நூலை ஆய்ந்திருக்கிறார்.  அந்நூலே இவருக்கு சுயமாகக் கணினி செயல்பாடுகளை  உருவாக்கும் வித்தையை மனதில் விதைத்திருக்கிறது.  இதன் விளைவாக மேனிலைக் கல்வி இரண்டாமாண்டில் கணினி அறிவியல் தேர்வில் 200க்கு 196 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.

தன்னுடைய மேனிலைக் கல்வியை முடித்த பின்னர் கணினி குறித்தத் தேடல்களில் ஈடுபடலானார்.  `தமிழ் கம்ப்யூட்டர்'  என்னும் 2 வாரத்திற்கு ஒருமுறை வரும் இதழை வாங்கிப் படிக்கத் தொடங்கியிருக்கிறார்.  இதன் அப்போதைய விலை பத்து உரூபாய்.  மாதத்தின் முதல் நாளும் பதினைந்தாம் நாளும் வரும் இவ்விதழ் முற்றிலும் கணினி சார்ந்ததோடல்லாமல் தமிழிலும் அமையப்பெற்றிருக்கும். `டிஜிட்’ என்னும் இதழும் இவரின் தேடலிலிருந்துத் தப்ப முடியவில்லை.   இவற்றை நன்கு பயன்படுத்திக்கொண்டு ஆசிரியர் முத்துக்கருப்பன் தன்னுடைய கணினி குறித்த அறிவை மேம்படுத்தியிருக்கிறார்.

பல கணினி சார் கட்டளைகள்,  செயல்பாடுகள் குறித்து அறிவதற்காக பன்முறை பல இணைய வழங்கி நிலையங்களை நாடினார்.  அப்பொழுது அங்கு ஒரு மணி நேரத்திற்கு முப்பது உரூபாய் வசூலித்திருக்கிறார்கள்.  இது அப்போதைக்கு அதிக தொகை என்றாலும் இணையம் அதிகம் வலுவடையாத காலம் அது.

இதனிடையே மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் நடத்தப்பெறும் பல தேர்வுகளை எழுதி வெற்றியும் கண்டுள்ளார்.  புதுச்சேரியிலுள்ள ஒரு கணினி பயிற்சி மையத்தில் சில காலம் ‘சி’ ,  `வன்பொருள் மற்றும் இணையம்'  சார்ந்த பயிற்சியையும் ஒருங்கே பயின்றார்.  இதன் விளைவாகத்தான் மைக்ரோசாப்ட்  நிறுவனத் தேர்வை எதிர்கொள்ளத் துணிந்தார்.  இத்தேர்வு அப்போது புதுச்சேரியில் நடத்தப்பெறவில்லை.  சென்னைக்குச் சென்றுதான் எழுதுதல் வேண்டும்.  சென்னையிலும் இணையத்தின் வழியாகவே எழுதுதல் வேண்டும்.  இதற்காகச் சென்னை வரை சென்று ஒரு மையத்தைத் தேர்ந்தெடுத்து தனிமைப்படுத்தப்பட்ட (முறைகேடுகளைத் தவிர்க்க வேண்டி) அறையில் தேர்வெழுதியிருக்கிறார்.

இதுவரை இவர்  மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் நடத்தப்பட்ட பின்வரும் தேர்வுகளில் தோன்றி வெற்றிக் கனியைப் பறித்துள்ளார்.  இத்தேர்வுக்கு இவர் ஆயத்தமான செய்திகளை நமக்குச் சொல்லும் போது கேட்க மிகவும் மலைப்பாக உள்ளது.

1.எம்.சி.பி
2.எம்.சி.எஸ்.ஏ  (மைக்ரோசாப்ட் சர்டிபைடு சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேடர்)
3. 2003 சர்வர் இல் எம்.சி.எஸ்.ஏ
4.எம்.சி.ஐ.டி.பி
5.எம்.சி.எஸ்.இ
என்னும் சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறார்.

அடுத்த பதிவில். . . . . . .  . . . . . . . .(2)

(இன்னும் வரும்)

அனைத்துத் தேர்வுகளிலும் வெற்றி பெற்ற திரு.முத்துக்கருப்பன், பின்னாளில் ஈசி தமிழ் என்னும் தமிழ் எழுதியை அறிமுகம் செய்தது எப்படி?

28.11.12

தொகையறிவோம்


தொகைகள் சிலவற்றை அறிவோம்:
அகராதிகள் சொல்லுக்குப் பொருள் வழங்க படைக்கப்பட்டவை.  அவ்வகராதிகளுள் சிறப்புமிக்க ஒன்றாக விளங்குவது தொகையகராதியாகும். தொகைச்சொற்களுக்கு உரிய விரியைக் கொண்டு இவை காணப்படுகின்றன.  இவ்வகையில் சில தொகைச் சொற்களுக்குண்டான விரியை இப்பதிவில் காணலாம்.

1. ஏழிசை:
தாரம், உழை, குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை

2. உபாயம்:
சாமம், பேதம், தானம், தண்டம்

3. ஆசிரியர்:
உரையாசிரியர், நூலாசிரியர், போதகாசிரியர்

4. ஆதாரம்:
மூலாதாரம், சுவாதிட்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி(ஐயம்), ஆஞ்ஞை (ஆணை)

5. ஐங்கணை:
தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை, 

6. அறப்பகுதி:
இல்லறம், துறவறம்

7. அரசர் தொழில்:
ஈதல், உலகுபுரத்தல், ஓதல், படை பயிறல், பொருதல், வேட்டல்

8. காடுபடுதிரவியம்:
அரக்கு, இறால், தேன், மயிற்பீலி, நாவி (கத்தூரி)

9. சிவசின்னம்:
உருத்திராக்கம், திருநீறு

10. தாயார்:
பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய்


11. நிறம்:
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை

12. தோற்றம்:
சரம், அசரம்

13. பாயிரம்:
பொது, சிறப்பு

14. பா:
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

15. பாதகம்:
கொலை, பொய், களவு, கள், குருநிந்தை

16. பொருள்:
கல்விப் பொருள், செல்வப்பொருள்

17. பொழுது:
மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு,
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்

18.பஞ்சமூலம்:
செவ்வியம், சித்திர மூலம், கண்டுபரங்கி, பேரரத்தை, சுக்கு

19.பருவம்:
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்

20. பிணி:
வாதம், பித்தம், சிலேத்துமம்

25.11.12

தன்மானச் செம்மல் திரு.வி.க

திரு.வி.க அவர்கள் எச்சமயத்திலும் தன்மானத்தை இழக்க விரும்பாத பெருந்தகையாளராக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.  அவர் தன்னுடைய வாழ்நாளில் எப்பொழுதும் பிறருடைய  உதவியை நாடியதேயில்லை.  அப்படி நாடியிருந்தால் அஃது பொருளுதவி குறித்த நாடலாக  இருக்க முடியாது.  

தன்னுடல் வாடி படுக்கையில் இருந்த காலகட்டத்திலும் இக்கொள்கையில் தளர்வுற்றிருந்தவர் அல்லர் அவர்.  வாடகை இல்லத்தில் இருந்தபோது வறுமை வாட்டிய காலம் அது.  திரு.கி.ஆ.பெ. அவர்களும் மு.வ அவர்களும் அவருக்கு உற்ற துணையாய் இருந்தனர்.  வாடகை வீட்டை காலிசெய்து தரும்படி உத்தரவு வந்தது வீட்டின் உரிமையாளரிடமிருந்து.  அப்போது திரு.கி.ஆ.பெ அவர்கள் பல வள்ளல்களுக்கு பொருளுதவி வேண்டி திரு.வி.கவுக்காகக் கடிதம் எழுதினார்.  பலர் அக்கடிதத்திற்குப் பதில் எழுதவில்லை.  இறுதியாக மதுரை கருமுத்து தியாகராச செட்டியார் அவர்களிடமிருந்து கடிதமும் அதனுடன் காசோலையும் வந்திருந்தது.  

திரு.வி.க அக்காசோலையைத் திருப்பி அனுப்பிவிட்டார்.  சிறிது நாட்கள் சென்ற பின்னர் கருமுத்து அவர்கள் கி.ஆ.பெ அவர்களுக்கு திரு.வி.க திருப்பி அனுப்பிய செய்தியைக் கடிதத்தின் வாயிலாகத்  தெரிவித்தார்.  இதனை அறிந்த கி.ஆ.பெ விசுவநாதன் அவர்கள் திரு.வி.கவிடம் இது குறித்து வினவலானார்.  அப்போது திரு.வி.க அவர்கள் இத்தனை நாட்கள் நான் எவ்வாறு இருந்தேனோ அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன் என்றும் இதுவரை நான் செய்யாத செயலைச் செய்யச் சொல்லாதீர்கள் என்றும் கூறினாராம்.  இந்நிகழ்வே திரு.வி.கவை தன்மானச் செம்மாலாக நமக்குக் காட்டுகிறது.


24.11.12

சிலம்பைப் பின்பற்றிய 2000 வாசகர்கள்

என்னுடைய சிலம்புகள் வலைப்பூ 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இருப்பினும் அப்பொழுது வலைப்பூவைத் தொடங்கியது மட்டும் தான் நான் செய்த செயல்.  சிலம்புகள்.காம் என்ற (வணிக மற்றும் வியாபார நோக்கமற்ற) தளத்தை நிர்வகித்துக் கொண்டிருந்ததால் வலைப்பூவில் எழுதுவதைத் தவிர்த்தேன்.  தற்போது தான் (செப்டம்பர் 2012)வலைப்பூவில் என்னுடைய தடத்தினைப் பதியத் தொடங்கினேன்.  மூன்று மாதங்கள் தொடர்ந்து எழுதிய என்னுடைய பற்பல பதிவுகளை சற்றொப்ப இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் தொடர்ந்து படித்து வருகின்றனர். குறுகிய காலமான மூன்று மாதத்தில் என்னுடைய வலைப்பூவை இவ்வளவு வாசகர்கள் பின்பற்றியிருப்பது என் தமிழுக்கு நான் ஆற்றிய பணியின் சிறப்பே என நினைக்கிறேன்.

பேராற்றல் வழங்கும் தமிழ்மொழி குறித்து நான் யாத்த பல பதிவுகளைக் காண வருகை தந்த அனைத்து தமிழன்பர்களுக்கும் என்னுடைய நன்றியை இத்தருணத்திலே உரித்தாக்குகிறேன்.

அருகில் உள்ள கட்டுரை தொகுப்பு (இடது பக்கம்) என்னும் பகுதியைப் பார்த்தால் சிலம்பு வலைப்பூவில் கட்டுரை எழுதத் தொடங்கிய காலப்பகுதியை அறியலாம்.

23.11.12

கடலூர் அஞ்சலையம்மாள்




***கடலூர் அஞ்சலையம்மாள்*** கருத்து எழுத sadishirisappan@yandex.com

நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர்களின் வரலாறுகளை அவ்வப்பொழுது தொகுத்து வெளியிட்டு வருகிறேன்.    என்னால் அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய மரியாதையே  இச்சிறு பணி!  அவ்வகையில் கடலூர் அஞ்சலையம்மாளைப் பற்றி நான் கேள்விப்பட்ட படித்தறிந்த செய்திகளை இக்கட்டுரையில் பதிவிடுகிறேன்.

1890ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகர் என்னுமிடத்தில் பிறந்தவர்.  மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தார்.  இவர்தம் வாழ்க்கையை சுயநலமின்றி அமைத்துக்கொண்டவர்.  காந்திய வழியைப் பின்பற்றத் தொடங்கியவர்.  1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய தருணத்தில் தம்முடைய பொது வாழ்க்கையைத் தொடங்கினார் அஞ்சலையம்மாள்.


நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக்காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் அறப்போராட்டம்,  வெள்ளையனே வெளியேறு போராட்டம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு வெள்ளையர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.


மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கிய இவரின் பேச்சைக் கேட்பதற்காகவே பல்லோர் திரள்வர்.  வெள்ளையனே வெளியேறு இயக்கம் நாடுமுழுவதும் நடைபெற்றபோது அதற்கு வலுச்சேர்க்கும் முகத்தான் பல மேடைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கருவுற்ற நிலையிலும் பல போராட்டங்களில் கலந்துகொண்டவர்.  சிறாஇக்குச் சென்றாவர்.  பிரசவத்தின்போது குழந்தையைப் பெற்றெடுக்க மருத்துவமனைக்குச் சென்று பின்னர் மீண்டும் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.

தன்னுடைய சொத்துக்கள் பலவற்றையும் விற்று போராட்டத்திற்காகச் செலவு செய்தார்.   நீலன் சிலையை அகற்றும் போராட்டம் நடைபெற்றபோது தனது 9 வயது மகளை ஈடுபடுத்தினார்.  இவருடைய மகள் லீலாவதி என்னும் பெயரைக் கொண்டவராவார்.

தமிழ்நாடு அரசு  கடலூர் அஞ்சலையம்மாளைப் பற்றிய பாடப்பகுதியை மாணவர்கள் பாடநூலில் அமைத்து, பல்வேறு செய்திகளை அறியச் செய்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.

தென்னாற்காடு மாவட்டத்தின் தெய்வத்தாய் என்றும் வேலுநாச்சியார் என்றும் போற்றப்பட்டார்.  இவரின் கணவர் முருகப்படையாச்சியாவார்.  மகன்கள்: காந்தி மற்றும் ஜெயவீரன் . மகள் அம்மாக்கண்ணு (லீலாவதி)

அஞ்சலையம்மாள் அவர்கள் பின்னாளில் தமிழக சட்டமன்றத்தில் அங்கம் வகித்தார்கள்.

புகைப்படத்திற்காக நன்றி:காமத்.காம்

20.11.12

வலுப்பெறா ஆமாமியா

ஆ, மா, மியா ஆகிய எதிர்மறை பலவின்பால் வினைமுற்று புணர்வதை அறிந்துகொண்டால் தேவையுள்ள இடங்களில் வல்லினத்தை மிகுத்தும் தேவையற்ற இடத்தில் வல்லினத்தை மிகுக்காமலும் எழுதக் கற்கலாம்.

அல்வழிப் புணர்ச்சியில் ஆ, மா, மியா என்பதை இறுதியில் கொண்ட அஃறிணைப் பன்மை வினைமுற்று முன் (இங்கு பின் ) வல்லினம் வரின் மிகாது; இயல்பானதே ஆகும்.

அஃறிணைப் பன்மை என்பதனால் ஒன்றன்பாலை ஒழித்து பலவின் பாலையே இங்குக்கொள்ளுதல் வேண்டும்.  ஏனெனில் அஃறிணையில் ஒன்றன் பாலும் பலவின் பாலுமே வரப்பெறும்.  ஒன்றன் பால் ஒருமைக்கும் பலவின் பால் பன்மைக்கும் உரியன.

நன்னூல் இயற்றிய பவணந்தியின் கூற்று  - ஆ, மா, மியா என்னும் எதிர்மறை வினைமுற்றுகள் வரும்போது வல்லினத்தை மிகுத்தல் கூடாது என்பதாகும்.

சான்று:
ஆ+குறிது = ஆ குறிது (சரி),ஆக்குறிது (தவறு)
மா+பெரிது=மா பெரிது (சரி), மாப்பெரிது (தவறு)
கேண்மியா+தேவா=கேண்மியாதேவா (சரி), கேண்மியாத்தேவா(தவறு)

சூத்திரம்:
``அல்வழி ஆ மா மியா முற்று முன்மிகா”

அன்றி இன்றி என்னும் குறிப்பு வினையெச்சங்கள் வரும்போது வல்லினம் மிகாமல் இயல்பாகவே வரும்.  அன்றியும் இன்றியும் உகரம் ஏறப்பெற்று வரும் போதே இம்மாற்றம் நிகழ்ந்து வல்லினம் மிகாது வரப்பெறும்.

சான்று:
அன்றி+போகி=அன்று போகி
இன்றி+புற்கை=இன்று புற்கை

அன்றி,  என்பது அன்று என உகரமேற்கும் போது வல்லினம் மிகாது ‘அன்று போகி’ என இயல்பாய் வந்தது.  இது போலவே இன்றி என்பதும் புணர்ந்தது.

நன்னூல் இதற்கும் சூத்திரம் வகுத்துள்ளது.

சூத்திரம்:
``அன்றி இன்றி என்னும் வினஎஞ்சு இகரம்
தொடர்பினுள் உகரமாய்வரின் இயல்பே”

18.11.12

மதுரகவியாழ்வார்

மதுரகவியாழ்வார் திருக்குருகூர் அருகிலுள்ள திருக்கோளூரிலே சித்திரை மாதத்துச் சித்திரை நட்சத்திரத்திலே அவதரித்தவர்.  நம்மாழ்வாரின் சீடராகத் திகழ்ந்தார்.  அவருடைய பாசுரங்களைப் பரப்புவதில் நாட்டங்கொண்டிருந்தார். 

நம்மாழ்வாரைப் பற்றி “கண்ணிநுண் சிறுத்தாம்பு” எனப் பாடினார்.  திருமாள் மீது இவருக்கிருந்த அன்பைக் காட்டிலும் நம்மாழ்வார் மீது இவருக்கிருந்த அன்பே அதிகம்.

``தேவுமற்று அறியே குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே” என்று பாடினார்.  

இளம் வயதிலேயே இனிய கவிதைகளை இயற்றக்கூடிய ஆற்றல் கைவரப் பெற்றவர்.  இதனாலேயே ‘மதுரகவி’ என அழைக்கப்பட்டார்.  இவர் பாடிய `கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்னும் பாமாலை பதினொரு பாசுரங்களே அடங்கியது.  இதுவே பின்னாளில் `சடகோபர் அந்தாதி’யைக் கம்பர் இயற்ற வழியாகியது.

செருக்குற்ற தமிழ்ப் புலவர்களுக்குப் பாடங் கற்பிக்க வேண்டி நம்மாழ்வார் இவரின் கனவில் தோன்றி பாடல் ஒன்றை எழுதி ஓலையில் கொடுத்திருக்கிறார்.  அவ்வோலையை மறுநாள் தன்னுடைய வாயிலில் கண்டெடுத்திருக்கிறார் மதுரகவியாழ்வார்.  அவ்வோலையில் நம்மாழ்வார் எழுதிய பாடலைத் தன்னிடம் போட்டியிட்டவர்கள் முன்னிலையில் படித்துக்காட்டி பொருள் கூறுமாறு செய்தார்.  அஃதாவது பாசுரத்தை மட்டும் ஏட்டில் எழுதிச் சங்கப்பலகையில் இட, அப்பலகை புலவர்களைப் பொற்றாமரைக் குளத்தில் வீழ்த்தி, அவ்வேட்டினை மட்டும் தாங்கி மிதந்தது.


16.11.12

கோவை வந்த வரலாறு

தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகத் திகழ்வது கோவை இலக்கியமாகும். முறையாகக் கோக்கப்பட்டது தான் கோவை என்னும் இலக்கியம்.   இவை முற்றிலும் அகப்பொருள் தழுவியவையாகும்.  அகப்பொருள் துறைகள் அனைத்தையும் கொண்டு நூல் இயற்றப்பட வேண்டும் என்னும் ஆர்வ மேலீடே இந்நூல் தோற்றத்திற்கு வித்திட்டது எனலாம்.  

தொல்காப்பிய இலக்கண நூலில் இடம்பெற்றிருக்கக் கூடிய பொருளதிகாரக் கருத்துக்களே கோவையிலக்கியத்தின் தோற்றுவாயக இருந்தன.  தொல்காப்பியத்திற்குப் பின்னர்  இறையனார் அகப்பொருள், மாறன் அகப்பொருள், நம்பியகப்பொருள் போன்ற இலக்கண நூல்கள் தோற்றம் பெற்றன.  இந்நூல்களில் இடம்பெறும் செய்திகளுக்குப் புலவர் பலர் எடுத்துக்காட்டுப் பாடல்கள் எழுத முற்பட்டனர்.  இதன் விளைவாகத் தோன்றியதே கோவை இலக்கியம்.  நாற்கவிராச நம்பி எழுதிய நம்பியகப்பொருளுக்கு விளக்கம் கூறும் முகமாக எழுந்த கோவையே தஞ்சைவாணன் கோவை.  எனவே பிற நூல்களுக்குச் சார்பாக விளக்கம் தர முற்பட்ட இலக்கியங்களே கோவை என்னும் சிற்றிலக்கிய வகையாய் நின்றது எனலாம்.

இலக்கண நூல்களுக்கு விளக்கம் பகர எழுந்த கோவை நூல்களுள் குறிப்பிடத்தக்கவை பாண்டிக்கோவை, தஞ்சைவாணன் கோவை.  இறையனார் அகப்பொருளுக்கு உரிய எடுத்துக்காட்டுகளமைய உருப்பெற்ற நூல்தான் பாண்டிக்கோவை என்னும் கோவை நூல்.


பாட்டுடைத் தலைவன், கிளவித் தலைவன் என்ற இருவர் பற்றி அதிகம் குறிக்கப்பட்டுள்ளது.  அகத்துறைகளை எடுத்துக்கொண்டு அத்துறை குறித்த பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.  இலக்கண நூல்களைக் கொண்டு, அகத்துறை ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டுப் பாடல்கள் அமையுமாறு பாடல்களை எழுதுவது மரபு.ஐந்திணைகளிலிருந்து மாறுபடாது 400 கட்டளைக் கலித்துறையால் பாடல் இயற்றப்படுவதாகும்.

ஒரு துறையையே எடுத்துக்கொண்டு 400 பாடல்களையும் எழுதியவரும் உண்டு.  இந்நூல் ‘ஒரு துறைக் கோவை’ என்று பெயர் பெற்றிருக்கிறது.  கோவை நூல்கள் பெரும்பாலும் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பை அடியொட்டியே பாடப்பெறும்.

மாதங்கீரனார், வெறிபாடிய காமக் கண்ணியார் போன்றவர்கள் ஒரு துறையைப் பற்றி பாடல்கள் பாடியுள்ளனர்.  முதலில் தோன்றிய கோவை இலக்கியமாகத் திகழ்வது திருக்கோவையார் ஆகும்.  இதனை மாணிக்கவாசகர் எழுதினார்.

`நாணிக்கண் புதைத்தல்’ என்னும் ஒரு துறையைக் கொண்டே ஒருதுறைக்கோவை நூல் உருப்பெற்றது.  முடிப்பாக,  பிற நூல்களுக்கு விளக்கச் செய்யுள்கள் எழுத முற்படும் போதுத் தோன்றியவையே கோவை இலக்கியம் எனலாம்.


15.11.12

`சொல்லும் ஓசையும்’ சொல்லும் நன்னூல்

`தமிழ்10 இல் அதிக ஓட்டுகளைப் பெற்ற பதிவு’
`சொல்’, `ஓசை’ என்னும் இரு சொல்லுக்கு இலக்கண நூலான நன்னூல் உரியியலில் பகரும் சொற்கள் குறித்த செய்தி இங்கே பதிவாகக் கட்டுரைக்கப்படுகிறது.

நன்னூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர்.  இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்.  இவரின் தந்தை சன்மதி ஆவார். சீயகங்கன் என்னும் மன்னன் இவரை ஆதரித்தவன்.  இம்மன்னன் கேட்டுக்கொண்டதற்கு இயைய இந்நன்னூல் உருப்பெற்றது.

இதனைச் சிறப்புப் பாயிரம் பின்வருமாறு புகல்கிறது:

“இருந்தமிழ்க் கடலுள் அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணரத் தொகைவகை விரியின் தருக’ என, ‘சீயகங்கன் மொழிந்தனனாக’ பொன்மதில் சனகை சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பின் பவணந்தி, என்னும் நாமத்து இருந்துவந்தோன், முன்னோர் நூலின் வழியே, நன்னூல் பெயரில் வகுத்தனன்.’ என்பது சிறப்புப் பாயிரம்.

இந்நூல் இயற்றப்பெற்ற பின் பலர் பல இலக்கண நூல்களைப் புறந்தள்ளி விட்டு இதனையேப் பயிலத் தொடங்கினர்.

ஒரு குணம் தழுவிய பல உரிச்சொற்கள் என்ற பகுதியானது 458 ஆம் சூத்திரத்தில் இடம்பெறுகிறது.

மாற்றம், நுவற்சி, செப்பு, உரை, கரை, நொடி, இசை, கூற்று, புகறல், மொழி, கிளவி, விளம்பு, அறை, பாட்டு, பகர்ச்சி, இயம்பல் ஆகிய பதினாறும் ‘சொல்’ என்ற ஒரு குணத்தை உணர்த்துகின்ற உரிச்சொற்களாகும்.

சூத்திரம்:
``மாற்றம் நுவற்சிசெப்பு உரைகரை நொடியிசை
கூற்றுப் புகறல் மொழிகிளவி விளம்புஅறை
பாட்டுப் பகர்ச்சி இயம்பல் சொல்லே”

இதைப் போலவே ஓசை என்ற பொருள் குறித்து வரும் சொற்களும் நயம் மிக்கனவாக உள்ளன.

முழக்கு, இரட்டு, ஒலி, கலி, இசை, துவை, பிளிறு, இரை, இரங்கு, அழுங்கு, இயம்பல், இமிழ், குளிறு, அதிர், குரை, கனை, சிலை, சும்மை, கௌவை, கம்பலை, அரவம், ஆர்ப்பு ஆகிய இருபத்திரண்டும் இவற்றைப் போன்ற மற்றவையும் ஓசை என்ற ஒரு குணத்தை உணர்த்தி வரும் உரிச்சொற்களாகும்.

சூத்திரம்:
``முழக்குஇரட்டு, ஒலிகலி இசைதுவை பிளிறுஇரை
இரக்கு அழுங்கு இயம்பல் இமிழ்குளிறு அதிர்குரை
கனைசிலை சும்மை கௌவை கம்பலை
அரவம் ஆர்ப்போடு இன்னன ஓசை”

14.11.12

விரித்துப் பார்ப்போம்

தொகைகள் சிலவற்றை அறிவோம்:
அகராதிகள் சொல்லுக்குப் பொருள் வழங்க படைக்கப்பட்டவை.  அவ்வகராதிகளுள் சிறப்புமிக்க ஒன்றாக விளங்குவது தொகையகராதியாகும். தொகைச்சொற்களுக்கு உரிய விரியைக் கொண்டு இவை காணப்படுகின்றன.  இவ்வகையில் சில தொகைச் சொற்களுக்குண்டான விரியை இப்பகுதியில் காணலாம்.

ஏழிசை:
தாரம், உழை, குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை

உபாயம்:
சாமம், பேதம், தானம், தண்டம்

ஆசிரியர்:
உரையாசிரியர், நூலாசிரியர், போதகாசிரியர்

ஆதாரம்:
மூலாதாரம், சுவாதிட்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி(ஐயம்), ஆஞ்ஞை (ஆணை)

ஐங்கணை:
தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை, 

அறப்பகுதி:
இல்லறம், துறவறம்

அரசர் தொழில்:
ஈதல், உலகுபுரத்தல், ஓதல், படை பயிறல், பொருதல், வேட்டல்

காடுபடுதிரவியம்:
அரக்கு, இறால், தேன், மயிற்பீலி, நாவி (கத்தூரி)

சிவசின்னம்:
உருத்திராக்கம், திருநீறு

தாயார்:
பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய்


12.11.12

குறள்பீட விருது

தமிழ்10 இல் அதிக ஓட்டுகளைப் பெற்ற பதிவு’

தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் வழங்கப்பட்ட பின் பல விருதுகள் தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.  அவ்விருதுகளுள் குறிப்பிடத்தக்கது `குறள்பீட விருது’.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாகக் கடந்த ஆண்டு (2011) மே மாதம் தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  இவ்விருதுகளை முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு பிரதீபா பாட்டீல் அவர்கள் வழங்கியிருந்தார்கள்.

குறள்பீட விருது:

ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளுள் குறிப்பிடத்தக்கது குறள்பீட விருது.  கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த தமிழறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட் அவர்கள் குறள்பீட விருது பெற்றார்இவ்விருது உரூபாய் ஐந்து இலட்சம் மதிப்புடையதாகும்.

இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் குறள்பீட விருது( 2008-09) பிரெஞ்சு நாட்டு அறிஞர் பிரான்சிவா குரோ அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 2012, திசம்பர் 21 இல் தலைநகர் புதுதில்லியில் இந்தியக் குடியரசுத்தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் இந்த விருதினை வழங்கிச் சிறப்பிக்க உள்ளார்.

இதுவரை சமற்கிருதம், பிராகிருதம், பாலி, அராபிக், பாரசீகம் ஆகிய மொழிகளுக்கே இவ்வகையான விருதுகள் வழங்கப்பட்டுவந்தன.  கடந்த ஆண்டு முதல் தமிழ் மொழிக்கும் வழங்கப்படுகிறது.

குறள்பிட விருதுடன் தொல்காப்பியர் விருதும், இளம் அறிஞர் விருதும் வழங்கப்படுகின்றன.  தொல்காப்பியர் விருது உரூபாய் ஐந்து இலட்சம் பணமுடிப்பையும் இளமறிஞர் விருது உரூபாய் ஒருஇலட்சம் பணமுடிப்பையும் கொண்டதாகும்.

கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் அடிகளாசிரியருக்குத் தொல்காப்பியர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.  

இளமறிஞர் விருதினை ஆர்.அரவிந்தன் (விழுப்புரம்), மணிகண்டன் (தஞ்சை), கலைமகள் (தஞ்சை), வா.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவர் (இராமநாதபுரம்), கே.பழனிவேலு (புதுவை), சந்திரா (மதுரை), அரங்க.பாரி (அரியலூர்), மு.இளங்கோவன் (அரியலூர்), பவானி (திருவாரூர்), கலைவாணி(நாகை), செல்வராசு, வேல்முருகன், மணவழகன், சந்திரசேகரன், சிமோன் சான் ஆகிய பதினைவர் பெற்றனர்.


10.11.12

திரு.வி.க வும் சைவமும்:

திரு.வி.க வின் அரும்பதவுரை முயற்சி


திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்கள் சைவத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார்.  மற்ற சமயங்களின் மீதும் மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தார்.  தன்னுடைய முதல் முயற்சியான பெரியபுராண அரும்பதவுரை எழுதிய போது சைவத்தின் மீது ஆறாக்காதல் உடையவராகக் காணப்பட்டார்.  பெரியபுராணத்திற்கு இவர் எழுதிய செம்பதவுரை இன்றும் தமிழறிஞர்களால் போற்றப்படுகிறது.

பெரியபுராணத்திற்கு பதவுரை கண்ட பொழுது அனைத்து சமயங்களையும் அவர் ஒருங்கே வைத்து எண்ணும் மனப்பக்குவம் பெற்றிருக்கவில்லை என்பது பலரின் கூற்று.  இக்கூற்று உண்மையே.  

அவர் தன்னுடைய 51ஆம் அகவையில் பெற்றிருந்த சமயப்பக்குவம் 24 ஆம் அகவையில் பெற்றிருக்கவில்லை என்று மா.ரா.போ குருசாமி அவர்கள் தன்னுடைய திரு.வி.க பற்றிய நூலில் குறிப்பிடடுகிறார்.

பெரியபுராணத்திற்கு அவர் எழுதிய அரும்பதவுரை மிகவும் தேற்றத்தோடு காணப்பட்டது.  பலரது அரும்பதவுரைகள் புரிதல் போக்கிலிருந்து மாறுபட்டுக் காணப்பட்ட அக்காலத்தில் பிறரது துணையின்றி அரும்பதவுரையைக் கொண்டே நாயன்மார்களின் திறன் அறியும்படி,  உரை தந்திருந்தார்.

இவ்வுரையைப் படித்தோர் பலரும் மிகவும் எளிய நடையைக் கையாண்டிருக்கும் திறனைக் கண்டு பாராட்டச் செய்தனர்.  பெரியபுராணத்தில்   குறிப்பிடப்படுகின்ற நாயன்மார்களின் வரலாறு குறித்துப் பலர் பல திறனாய்வுகளை வெளிப்படுத்தியிருந்த அக்காலத்தில் நாயன்மார்களின் திறனை சைவநோக்கில் ஆய்ந்து தகுந்த விளக்கங்களைத் திறனாய்வாளர்களுக்குத் தன்னூலில் அளித்திருந்தார்.

கண்ணப்ப நாயனார் அப்பொழுதே கண் தானத்திற்கு வித்திட்ட முறைமையும் இயற்பகை நாயனார்தன் தவத்திற்காக மனைவியைத் தானமாகக் கொடுத்த முறைமையும் பலரால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.  இவற்றைப் பலரும் ஏற்கும் வகையில் தகுந்த அரும்பதவுரை கண்டிருந்தார் திரு.வி.க.

திரு.வி.கவின் இப்பதவுரை முயற்சி இரண்டாம் முறையாகச் செம்பதிப்பைப் பெற்றபோது எண்ணற்ற மாற்றங்களோடு வெளிவந்தது.  காரணம் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்களில் தேர்ந்த சமரசக் கொள்கை அறிவைப் பெற்றிருந்தார்.  அனைத்து சமயங்களும் வலியுறுத்துகின்ற நெறி ஒன்றே எனத் தேர்ந்தார்.  சமரச வழியைக் கைக்கொண்டார்.  

திரு.வி.கவின் முதல் நூல் முயற்சி இது என்பர் சிலர்.  ஆயினும் இம்முயற்சிக்கு முன்பே தன்னாசிரியர் கதிரைவேற்பிள்ளையவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிவெளியிட்டிருந்தார் திரு.வி.க.  இந்நூல் மிகுந்த வரவேற்பைப் பெறவில்லை என்பர் பலர்.

நன்றி:-
` திரு.வி.க’  - மா.ரா.போ.குருசாமி (பார்வை நூல்)


9.11.12

குழந்தைக் கவிஞர்களுக்கு மகுடம் சூட்டுவோம் - 1

தணிகை உலகநாதன்:

குழந்தைகளுக்காக வேண்டி எண்ணற்ற பாடல்கள் பலரால் படைக்கப்பட்டுள்ளன.  இருந்தபோதிலும் இக்குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டவர்களில் மூத்தோராக நம் எட்டயபுரத்துக் கவி பாரதியைக் கொள்ளல் வேண்டும்.  அனைவரும் புரிந்துபடிக்கும் வண்ணம் கவிதை யாத்தது குழந்தைகளையும் ஈர்த்து நின்றது.  
“வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர், பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை பேருக்கொரு நிறமாகும்”என்னும் பாடலின் மூலம் வேற்றுமை மாய்ந்து நாம் ஒன்றுபட வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தினார்.

அழ.வள்ளியப்பாவின் எழுத்துப் பணி குழந்தைகளை நடுவமாகக் கொண்டிருந்தது.  “கண்ணன் எங்கள் கண்ணனாம், கார்மேக வண்ணனாம், வெண்ணெய் உண்ட கண்ணனாம் மண்ணை உண்ட கண்ணனாம்” என்பனப் போன்ற வரிகள் அவரின் குழந்தை எளிமை வரிகளை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

இவ்வரிசையில் இப்பதிவில் பதியப்படுகின்ற குழந்தைக் கவிஞர் திரு. தணிகை உலகநாதன் ஆவார். இவர்  வேலூர் மாவட்டத்திலுள்ள  திருவத்திபுரம் என்னும் ஊரில் 01-10-1921 அன்று பிறந்தவர்.  தா.தணிகாசலம், சுந்தரம் அம்மையார் ஆகியோர் இவரின் பெற்றோராவர்.

குழந்தைக் கவிஞர்களின் வரிசையில் ஒருவராக வைத்துப் போற்றப்படுகிறார். `வீரத்துறவி விவேகானந்தர்'  இவர் எழுதிய நூல்களுள் ஒன்று.  பூஞ்சோலை, தேன்சுவைக் கதைகள், பாடும் பாப்பா, மாணவர் தமிழ் விருந்து, சிறுவர் நாடக விருந்து முதலிய பல நூல்களை எழுதியுள்ளார்.
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற இவர் பல நூல்களுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்.  அழ.வள்ளியப்பாவின் பாடல்கள் பல வெளிவருவதற்கு அவருக்கு உற்ற துணையாகத் திகழ்ந்திருக்கிறார்.


``சிறந்த கவிஞர்களில் புலவரும், வானொலி சிறுவர் சங்கப் பேரவையின் தலைவருமாகிய திரு.தணிகை உலகநாதன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். 1954க்குப் பிறகு நான் எழுதிய கவிதை நூல்கள் அனைத்தும் அவர் பார்வையிட்ட பின்னரே வெளிவந்துள்ளன” என்று வள்ளியப்பா அவர்கள் கூறியுள்ளார்.

நம் சிறார்கள் அழகாகப் பாடும் `பொம்மை பொம்மை பொம்மை பார்’ என்னும் பாடலுக்கு ஆசிரியர் இவரே. 


“பொம்மை பொம்மை பொம்மை பார்

“பொம்மை பொம்மை பொம்மை பார்

புதிய புதிய பொம்மை பார்

கையை வீசும் பொம்மை பார்

கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார்

தலையை ஆட்டும் பொம்மை பார்

தாளம் போடும் பொம்மை பார்

எனக்கு கிடைத்த பொம்மை போல்

ஏதும் இல்லை உலகிலே”

நமக்கு இவ்வுலகில் எவரும் எதிரிகள் அல்லர் என்பதைக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டி, 


நான் எல்லோருக்கும் நல்லவனே

எலிக்குப் பகைதான் பூனை என
எவரும் அறிவர் உலகினிலே

பூனைக்குப் பகை நாயாகும்
போடும் சண்டை தெருவினிலே

புலியைக் கண்டால் மான் ஓடிப்
புதரில் புகுந்து மறைந்துவிடுமே

நண்டுக்குப் பகை நரியாகும்
நானும் நீயும் இதையறிவோம்

பழைய நாய்க்குப் புது நாய்தான்
பகையாம் இதனை அறியார் யார்?

பாம்புக்குப் பகை கீரி எனப்
பலரும் அறிவார் பாரினிலே

எனக்குப் பகையே இல்லை, நான்
எல்லோருக்கும் நல்லவனே.

 என்னும் பாடலை யாத்தளித்தார்.  
தமிழ் நாடு முழுவதும் மாணவர்மன்றத் தமிழ்த் தேர்வை நடத்துபவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.




5.11.12

ஆசிரியர்கள் விரும்பும் தளம்

ஆசிரியர்களுக்கென ஒரு தளம்

டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா தளத்தின் தோற்றம்

முகவரி:http://www.teachersofindia.org/ta

`அசிம் பிரேம் ஜி' நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற ‘இந்திய ஆசிரியர்கள்’ என்னும் தளம் பல்வேறு ஆசிரியர்களின் படைப்புகளைக் கொண்டும் மாணாக்கரின்  வகுப்பறைக் கல்வியை மேம்படுத்தும் வழிகளைக் கொண்டும் இயங்கி வருகிறது.

இத்தளமானது ஐந்து மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகியவை இவ்வைந்தில் அடக்கம்.  இம்மொழிகளில் நமக்குத் தேவையான மொழியைத் தேர்வு செய்தால் அத்தளம் அம்மொழியில் நமக்குக் காட்சியளிக்கத் தொடங்கிவிடும்.   சற்றொப்ப கூகிள் மொழிபெயர்ப்பைப் போன்றதே!

வகுப்பறை வளங்கள்:
 
இப்பகுதியில் கட்டுரை, ஒலி, மின்வலை நூல்கள், விளக்கப் பாடங்கள், ஊடக வகை, செய்முறைத்தாள், பாட விளக்க முறை, பாடப் பயிற்சிகள், படம் முதலியன அமையப்பெற்றுள்ளன.  இவற்றில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கின்றோமோ அது குறித்து ஆசிரியர்கள் பகிர்ந்துள்ள படைப்புகள் காட்டப்படும்.

பாட வகைகளாகக் கலைகள், சுற்றுச்சூழல் அறிவியல், விளையாட்டுகளும் உடற்பயிற்சிகளும், மொழி, கணிதம் அறிவியலும் தொழில்நுட்பமும், சமூகறிவியல், கருத்துக்கள் - பிரதிபலிப்புகள், பிற பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.

இதைப் போல வகுப்பும் தர நிலையின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது.  அஃதாவது மழலைக் கல்வி, முதல் இரண்டு வகுப்புகள் (1-2), மூன்று மற்றும் ஐந்தாம் (3-5)வகுப்பு வரை ஒரு பிரிவு, ஆறு மற்றும் எட்டு (6-8) வரை ஒரு பிரிவு, ஒன்பது முதல் பத்தாம் (9-10) வகுப்பு வரை ஒரு பிரிவு, பதினொன்று முதல் பன்னிரண்டு வரை என ஆறு வகையாகத் தர நிலை பிரிக்கப்பட்டு வகுப்பறை வளங்கள் வழங்கப்படுகின்றன.

வகுப்பறை வளங்கள் என்றால் என்ன?  என்பது குறித்து ஐயம் எழுந்து நிற்கிறதா?  இதோ உதாரணம் - புயல் எச்சரிக்கை கூண்டு விவரம், அறிவியல் பாடப்பயிற்சித்தாள் - உடல் உறுப்புகள், மகிழ்ச்சி தரும் கணித அளவுகள், இரண்டாம் கட்ட கூட்டல் பயிற்சி, க்யூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பிய அபூர்வ பாறைப்படம், சென்னை மாணவ மாணவிகள் அணியாக உருவாக்கிய குருவி அமைப்பு முதலியனவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

ஆசிரியர் மேம்பாடு:

நான் சிறந்த கட்டுரைகளைப் படிக்க விரும்புகிறேன்; நான் புதுமையான கற்பிக்கும் வழிகளைப் பற்றி அறிய விரும்புகிறேன்; நான் எப்படிச் சிறப்பாகக் கற்பிக்க முடியும் என்பதைப் பற்றியும் அறிய விரும்புகிறேன் என்கிற எண்ணங்கள் எழுகின்ற ஆசிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே `ஆசிரியர்கள் மேம்பாடு’ என்னும் பகுதி.  மேற்கண்ட எண்ணம் எழுகின்ற ஆசிரியர்களுக்குத் தேவையான அனைத்துச் செய்திகளும் இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.  ஆசிரியரும் தன்னுடையப் பங்களிப்பை வழங்கிச் சிறப்பிக்கலாம்.

சிறப்பியல்பினர்:

சிறப்பியல்பினர் என்ற பகுதியில் ஒவ்வொரு ஆசிரியரைப் பற்றிய முழு செய்தியும் வெளியிடப்படுகிறது.  நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களின் முழு விவரத்தையும் அவர்கள் பணியாற்றிய திறத்தையும் வெளியிட்டு அவர்களைப் பெருமைப்படுத்துகிறது.

அண்மையில் திரு.செல்வகுமார் என்கிற பனித்திட்டு தொடக்கக் கல்வி ஆசிரியரைப் பற்றிய செய்தி இடம்பெற்றிருந்தது  மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

நீங்கள் ஆசிரியராக இருந்தால் இத்தளத்தில் இணைந்து வகுப்பறைக் கற்றல் கற்பித்தலில் தாங்கள் கண்ட அனுபவங்களைவெளிப்படுத்திகாட்டுங்கள், குழு விவாதத்தில் பங்குகொள்ளுங்கள்.  இவற்றை மேற்கொள்ள இத்தளத்தில் உறுப்பினராதல் இன்றியமையா ஒன்று.

05-11-2012 வரை இத்தளத்தில் 3456 உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.

உரிய கற்றல் அடைவை  முயன்ற அளவில் மாணவர்களுக்குப் பெற்றுத் தந்திட இத்தளத்தின் வழிகாட்டுதல்கள் நமக்குப் பேருதவியாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

3.11.12

வி.கனகசபையாரை அறிவோம்


திரு.வி.கனகசபையார்


தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தவர் திரு.வி.கனகசபை ஆவார்.  தமிழ் இலக்கியத்தில் பேரார்வம் மிக்கவராய்த் திகழ்ந்தார்.  பல இலக்கியங்களைப் பயின்றவர்.  அவ்விலக்கியங்களைப் பயின்று பல்லோரும் அவ்வின்பத்தை அடைய ஏதுவாகப் பல கட்டுரைகளை யாத்தளித்தார்.  இவரது தந்தை விசுவநாதம்பிள்ளை.  இவர் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.  கனகசபையாரோ சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.  பி.ஏ.,பி.எல் பட்டம்பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்.  இவரின் இளங்கலைக் கல்வி சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிறைவேறியது. 
தமிழர் வரலாறு குறித்து பல்லாய்வுகளை மேற்கொண்டு அவற்றை கட்டுரைகளாக எழுதினார்.  ‘ஆயிரத்தெண்னூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்என்னும் நூல் தமிழில் வெளிவர இவரே கருத்தாவாக இருந்தார்.  இவர் ஆங்கிலத்தில் அவ்வப்பொழுது தமிழர் வரலாறு குறித்து எழுதிவந்த கட்டுரைகள் அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து ஆங்கிலத்தில் `The Tamils 1800 Years Ago’  என்னும் நுலாக வெளியிட்டார்.  பின்னர் பன்மொழிப்புலவர் திரு.கா. அப்பாத்துரை, எம்.ஏ., ஏல்.டி அவர்கள் இவ்வாங்கில நூலைத் தமிழில் `ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் என்னும் நூலாகப் பெயர்த்து வெளியிட்டார்.
இந்நூலில் ஆங்கில நூலாசிரியர் திரு.வி.கனகசபை என்று கனகசபையாரின் பெயரை முதலில் இட்டுப் பின்னரே தன்பெயரை அச்சிட்டார் அப்பாதுரையார்.  திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் 1962ஆம் ஆண்டு இந்நூல் வெளியிடப்பட்டது. 
இந்நூலில் தமிழகத்தின் நிலஇயல் பிரிவுகள், வெளிநாட்டு வாணிகம், தமிழ்க் கிளை இனங்களும் கிளைகளும், சோழர், பாண்டியர், சேரர், வேளிரும் குடிமன்னரும், சமூக வாழ்வு, திருவள்ளுவர் குறள், சிலப்பதிகாரக் கதை, மணிமேகலைக் கதை, தமிழ்க் கவிஞர்களும் கவிதைகளும், அறுவகை மெய்விளக்கக் கோட்பாடுகள், சமய வாழ்வு ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
திரு.வி.கனகசபை 1855 முதல் 1906 வரை 51 ஆண்டுகள் வாழ்ந்து தமிழுக்குப் பணி செய்தார்.  இவரின் பதிப்புத் தொகுப்புகள் பலவும் உ.வே.சா அவர்களின் அச்சுப்பணிக்கு உதவியாய் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

2.11.12

இரண்டாம் ஆதனும் கபிலரும்


சேர அரசகுடியில் தோன்றியவன் இரண்டாம் ஆதன்.  செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் பட்டப்பெயரைக் கொண்டவன்.  முதலாம் ஆதனையடுத்து அரசிருக்கையை அடைந்தவன்.  இவன் கரிகாலன் மகள் சோணை என்பவளை மணந்தான்.  வலிமை மிக்க பேரரசனின் மருமகன் என்னும் நிலையை எய்தினான்.    இதனால் இவனுடைய ஆட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  நாடும் நல்ல வளமுடன் திகழ்ந்ததாக அறியமுடிகிறது.
இரண்டாம் ஆதனின் மேலான நட்புக்குரியவராக விளங்கியவர்தான் கபிலர்.  இவர் பார்ப்பனர்.  ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ஆதன்,  கபிலரின் கரம் பற்றி இவ்வளவு மென்மையாக இருக்கிறதே உமது கைகள் என வியந்து கேட்க, கபிலர் அதற்குத் தன் தொழில் பாடல் புனைவது என்றும் தங்கள் போன்றோரின் தொழில் எதிரிகளை வீழ்த்தி வாகை சூடுவதென்றும் கூறி மன்னனைப் பலவாறு புகழ்கிறார்.  புகழ்வதில் மிகவும் வல்லமை பெற்ற கபிலர் மன்னன் கையின் வீர வலிமையைப் புகழ்ந்து, அத்தகைய வீரன் ஆதரவில் வாழும் கவிஞர்களின் கைகள் மெல்லியனவாக இராமல் வேறு எப்படி இருக்க முடியும் என்று கூறினாராம்.
இக்கருத்தை அவர் பாடிய பாடலின் பொருளால் விளங்கிக்கொள்ளலாம்.
“வீரமிக்க அரசனே உன் தடந்தோள்கள் அழகு மிக்க அணங்குகளுக்குக் காதல்நோய் ஊட்டுபவை.  அதே சமயம் அவை உன் எதிரிகளுக்கும் அச்சம் தருபவை.  உன் தடக்கைகளோ, பொன்வேய்ந்த அங்குசத்தால் யானையை ஊக்கி இருப்புத் தாழிட்ட உன் எதிரிகளின் கோட்டை வாயில்கள் மீது அவற்றை ஏவுபவை.  உன் வீரர்களால் சமன் செய்யப்பட்ட கரைகளையுடைய ஆழ்ந்த அகழிகளைத் தாவும்படி வீறுமிக்க உன் போர்க்குதிரையை நாத்திச் செல்லும்வண்ணம் கடிவாளங்களைப் பிடித்திழுப்பவையும் அவையே.  தவிர நீ தேரில் செல்லும்போது உன் தோள் மீதுதொங்கும் அம்புத் தூணிலிருந்து அம்புகளை எடுத்து அவற்றை எய்யும்படி வில்லைவாங்கி விறல்பட வளைப்பவையும் அவையே.  இத்தகைய ஆற்றல் வாய்ந்த செயல்களைச் செய்வதனால், உன் தோள்கள்  நீண்டு திரண்டும், கைகள் துவன்றும் வலிமை பெற்று உள்ளனஎன்று விளங்கிடும்படி பாடினாராம்.
மற்றொரு சமயத்தில்,
கதிரவனையும் இரண்டாம் ஆதனையும் ஒப்பாக வைத்துப் பாடிய கபிலர் கதிரவனைத் தாழ்த்தியும் ஆதனை உயர்த்தியும் புகழ்பாடியிருக்கிறார்.
``வையங் காவலர் வழிமொழிந் தொழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது
இடஞ்சிறி தென்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா உள்ளத் தோம்பா ஈகைக்
கடந்தடு தானைச் சேரல் ஆதனை
யாங்கனம் ஒத்தியோ, வீங்குசெலல் மண்டிலம்?
பொழுதொடு வரைதி, புறக்கொடுத் திறத்தி;
மாறிவருதி, மலைமறைந் தொளித்தி;
அகலிரு விசும்பினானும்
பகல்விளங் குதியால், பல்கதிர் விரித்தே!
என்ற பாடல் வரிகளில் கட்டாயம் இரண்டாம் ஆதன் புகழ்மயக்கம் எய்தியிருக்க வேண்டும்.  ஏனெனில் இப்பாடல் கேட்ட ஆதன் கபிலருக்கு எண்ணற்ற ஊர்களைப் பரிசாகக் கொடுத்தானாம்.
இரண்டாம் ஆதனின் இரு புதல்வர்களே செங்குட்டுவனும், சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகளும் என்பதைக் குறித்தாக வேண்டும். 
அறிவன் ஒருவன் அரசனான இரண்டாம் ஆதன் அரியணையில் வீற்றிருக்கும் போது அவனைக் காண வந்தான் .  அப்போது ஆதனின் அருகே இரு செல்வப்புதல்வர்களும் வீற்றிருந்தனர்.  ஆதனையும் அவன் புதல்வர்களையும் கண்ணுற்ற அவ்வறிவன் இரண்டாம் புதல்வந்தான் (இளங்கோவடிகள்) உமக்குப் பின் இந்நாட்டை ஆளப்போகிறான் என்றுரைத்தான்.  மேலும் நீ விரைவில் மாண்டுவிடுவாய் என்றும் கட்டியம் கூறினான்.  அவன் சொல்லை மறுத்துத் தன் அண்ணன் மேல் ஆறாக்காதல் கொண்ட இளங்கோவடிகள் அரச துறவு பூண்டொழுகினார்.  தன் அண்ணனை தன் தந்தைக்குப் பிறகு அரசு ஆளச்செய்தார்.  அறிவன் கூறியதுபோல் இரண்டாம் ஆதனும் சிக்கற்பள்ளி என்னுமிடத்தில் உயிர்நீத்தான்.   இதனால் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் என்று அழைக்கப்பட்டான்.