தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

8.3.14

மூவண்ணங்கள் - தமிழ் தமிழர் வரலாறு எழுத நெறி வகுக்கிறது.

வண்ணமும் வரலாறும்
வடமொழிக் கலப்பால் தெலுங்கு, கன்னடம், மலையாளம்  ஆகிய மொழிகள் பெரிதும் வேறுபடுத்தப்பட்டன.  தமிழிலிருந்து பிரிந்த சுவடும் தெரியாமல் இடைவெளி பெருகிப் போனது.  ஆனால் தமிழ் ‘உள்ளீடு மாறாத வண்ணப் பூச்சுப் போலவே’ வடமொழியை ஏற்றுள்ளது.  இவ்வடமொழி வண்ணந்தானும் மூவகையாகப் பகுத்துணர்தலுக்குரியது.  மறைக்காட்டை வேதாரண்யம் எனவும் முதுகுன்றத்தை விருத்தாசலம் எனவும் மாற்றியது போல் நேர்ந்த பெயர் மாற்றங்களும் சொற்கலப்புகளும் வெளிவண்ணமென்றே கருதுதற்குரியன.  புராண, இதிகாசங்களை ஏற்றதும் இலக்கிய, கலைக் கலப்புகளும் உள்வண்ணம் என மதித்தற்குரியன.  தமிழிசை மாறிக் கருநாடக இசையாகியதும் பரதக்கலை தென்னகத்திற்கேயுரிய கலையாக இருந்தும் வடநூல் வழிப்பட்டதும் சமயத்துறையில் ஏற்பட்ட கருத்துக் கலப்பும் பிறவும் உட்கலப்பு வண்ணமெனற்கு உரியன.  இவற்றால் எல்லாம் தமிழும் தமிழர் பண்பாடும் பெரிதும் பாதிக்கப்படாமை கருதியே இவை வண்ணம் அல்லது வெளிப்பூச்சு எனப்பட்டன.  தமிழ்மொழியைப் பொறுத்தவரை “வடமொழிக் கலப்பைப் பெரும்பகுதியோ அல்லது முழுவதுமாகவோ தமிழ்மொழி தவிர்த்துவிடுதல் கூடும்.  அங்ஙனம் தவிர்த்தலின் மூலமாக அது தூய, மிகச் சிறந்த நிலையை எய்துகிறது”. என்ற கால்டுவெல் ஐயர் அவர்களின் கருத்து இங்கு நினைத்தற்குரியது.  மேற்சுட்டிய ஏற்புநிலை, எதிர்நிலை, ஆதிக்க நிலை என்பனவும் இங்குச் சுட்டிய மூவண்ணப் பூச்சு நிலைகளும் தமிழர், தமிழ் வரலாறு எழுதக் கைக்கொள்ள வேண்டிய நெறிமுறைகளாகும்.

11.9.13

சுதேசமித்திரன் இதழில் பாரதிதாசனின் கட்டுரை

பாரதிதாசன் வேண்டிய நிகண்டு
பாவேந்தர் புதுச்சேரியைச் சார்ந்த முத்திரைப் பாளையம் அரசினர் பள்ளியில் பணியாற்றி வந்தார்.  அப்போது ‘தமிழ்பாஷைக்கு ஒரு புதிய நிகண்டு வேண்டும்’ என்ற கட்டுரையை எழுதி சுதேசமித்திரன் இதழில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பதால் மொழி வளம்பெறுமென்றும், தமிழ்மொழிக்குப் புதிய நிகண்டு வேண்டும்  என்ற கட்டுரையை எழுதிஅவ்விதழில் 26-05-1914 ஆம் நாளில் வெளியிட்டார்.  தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பதால் மொழி வளம் பெறுமென்றும், தமிழ்மொழிக்குப் புதிய நிகண்டு வேண்டும் என்றும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.  கட்டுரையின் ஒரு பகுதி இதோ.
“நமக்கு அடுத்த வட பக்கத்தில் உள்ள தெலுங்கர்களோ, தங்கள் பாஷையைச் சீர்திருத்துமாறு போட்டி போட்டியாய்ச் சாலைகளும் சங்கங்களும் ஏற்படுத்திப் பரபரப்புடன் வேலை செய்து வருகிறார்கள்.  அவர்களின் ஊக்கத்தைப் பார்த்தாவது தமிழர்கள் தங்கள் பாஷையின் விஷயத்தில் ஏதாவது கவலை கொள்கிறார்களோ என்றால் அது மாத்திரமில்லை”.

9.8.13

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

தொண்டரடிப் பொடியாழ்வார்


தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு விப்ரநாரணர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.  திருவரங்க நாதனுக்கு தினந்தோறும் மாலை சாத்த, ஆலயத்தில் தோட்டம் அமைத்து மலர்ச் செடிகளை வளர்த்து வந்தார்.  அங்கு தேவ தேவி என்ற விலைமாதின் வயப்பட்டுத் தம் வாழ்நாளைக் கழித்தார்.  பின்னர், அக்கள்ளம் கரைய உருகிப் பாடிய பாக்கள் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி நூல்களாகும்.  இவர் இயற்றிய திருப்பள்ளியெழுச்சி நூல் கவிதை நயமும் இயற்கை எழிலும் நிறைந்ததாகும்.  அர்ச்சையில் அரங்கனைத் தவிர வேறு ஒருவரையும் பாடாத அன்பர்.

``பச்சைமா மலைபோல் மேனி, பவளவாய் கமலச் செங்கண் என்ற புகழ் மிக்க பக்திப் பாடலைப் பாடிய ஆழ்வார்.  “மெய் எல்லாம் போகவிட்டு விரிகுழலாரிப்பட்டு பொய் எல்லாம் பொதிந்து கொண்ட பொய்யனேன், பொய்யனே? என் மனதின் ஓர் தூய்மை இல்லை.  வாயில் ஓர் இன்சொல் இல்லை, பொழுதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி அணைய மாட்டேன்; தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன்; காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன்; ஆகையால் ஏதுமற்றேன்என்கிறார்.

``ஊரிலேன் காணியில்லை உறவும் மற்றொருவர் இல்லை
பாரில் நின்பாத மூலம் பற்றிலேன், ப்ரமமூத்தி
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகிறேன்
ஆரூர் களைகண் அம்மா அரங்கமா நகருளானே ” 
என்று இறைவனை நோக்கி இறைஞ்சுகிறார்.

31.7.13

காந்திஜியை காந்தியடிகள் என்றாக்கியவர் யார்?

தேசப்பிதா ‘காந்திஜியை’ ‘காந்தியடிகள்’ என்று குறிப்பிட்டு
பத்திரிகைகளில் எழுதியவர் திரு.வி.க அவர்கள் தான்.  சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தி அடிகளைப் பற்றி படித்த போது காந்தியை ‘காந்தியடிகள்’ என்று குறிப்பிட வேண்டும் என்று தனக்குத் தோன்றியதாக திரு.வி.க ‘்நவசக்தி’ பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.

அன்னிபெசண்ட் அவர்களை ‘அன்னை வசந்தை’ என்றே திரு.வி.க எழுதுவார்.  ‘வல்லரசு’ என்ற புதிய அரசியல் பதத்தை முதன்முதலில் உருவாக்கியவரும் திரு.வி.க அவர்கள் தான்.  

21.7.13

திரு.வி.க வின் பொன்மொழிகள் - 1

பொன்மொழிகள்
திரு.வி.க அவர்கள் தன் வாழ்நாளில் உதிர்த்தவை எல்லாமே பொன்னேடுகளில் பொறிக்கத்தக்கவை.  அவைகளுள் முத்தென விளங்கும் பொன்மொழிகள் இங்கு அடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டுமாயின் தமிழ் மக்கள் முதலாவது தங்கள் மொழியினிடத்துப் பற்றுக்கொள்ளல் வேண்டும்.  தமிழ் மக்கள் எம்மதத்தைப் பற்றி ஒழுகினும் ஒழுகுக அவர்கள் மொழிப்பற்றை மட்டும் விடுதலாகாது.
 
பெற்ற தாயின் அன்புக்கும் பிறந்த நாட்டின் பற்றுக்கும் ஊற்றாயிருப்பது பேசும் மொழியே ஆகும்.  பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் , தாயையும் நாட்டையும் பழித்தவனாவான்.
 
தமிழ் மகனே! விடுதலை விடுதலை என்று வெறுங் கூச்சலிடுவதால் பயன் என்ன?  விடுதலை முயற்சி விடுதலை தருவதாயிருத்தல் வேண்டும்.  விடுதலை விடுதலை என்று சிறைக்கூடத்தில் நோய்வாய்பட்டுள்ள தமிழ்த் தாயைச் சுற்றிலும் தீயிட்டு எரிப்பது அவர் நோய் போக்கும் மருந்தாகுமா என்பதை கவனிக்க.
 
தமிழ்மக்களே உங்களைத் தமிழ் மக்கள் என்று அழைக்கச் செய்திருப்பது எது?  அதை நினையுங்கள்.  அதை மறந்து ஆற்றப்படுந் தொண்டுகள் கடைக்காலில்லாமல் எழுப்பப்படும் கட்டடம் போன்றவையாகும்.  நீங்கள் எத்தொண்டு செய்யினும் அத்தொண்டின் அடிப்படையில் தமிழ் வேட்கை எழுச்சி இருத்தல் வேண்டும்.  அவ்வேட்கையால் உங்களைப் பலவாறு பிரித்துப் பிளக்க உங்கள் பால் இடைநாளில் தோன்றிய சாதிமதப் பூசல்கள் உங்களை விடுத்து இரிந்து ஓடும் அவ்வாற்றல் அமிழ்தினும் இனிய தமிழ் வேட்கைக்கு உண்டு என்பவை மறவாதேயுங்கள்.