தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

8.3.14

மூவண்ணங்கள் - தமிழ் தமிழர் வரலாறு எழுத நெறி வகுக்கிறது.

வண்ணமும் வரலாறும்
வடமொழிக் கலப்பால் தெலுங்கு, கன்னடம், மலையாளம்  ஆகிய மொழிகள் பெரிதும் வேறுபடுத்தப்பட்டன.  தமிழிலிருந்து பிரிந்த சுவடும் தெரியாமல் இடைவெளி பெருகிப் போனது.  ஆனால் தமிழ் ‘உள்ளீடு மாறாத வண்ணப் பூச்சுப் போலவே’ வடமொழியை ஏற்றுள்ளது.  இவ்வடமொழி வண்ணந்தானும் மூவகையாகப் பகுத்துணர்தலுக்குரியது.  மறைக்காட்டை வேதாரண்யம் எனவும் முதுகுன்றத்தை விருத்தாசலம் எனவும் மாற்றியது போல் நேர்ந்த பெயர் மாற்றங்களும் சொற்கலப்புகளும் வெளிவண்ணமென்றே கருதுதற்குரியன.  புராண, இதிகாசங்களை ஏற்றதும் இலக்கிய, கலைக் கலப்புகளும் உள்வண்ணம் என மதித்தற்குரியன.  தமிழிசை மாறிக் கருநாடக இசையாகியதும் பரதக்கலை தென்னகத்திற்கேயுரிய கலையாக இருந்தும் வடநூல் வழிப்பட்டதும் சமயத்துறையில் ஏற்பட்ட கருத்துக் கலப்பும் பிறவும் உட்கலப்பு வண்ணமெனற்கு உரியன.  இவற்றால் எல்லாம் தமிழும் தமிழர் பண்பாடும் பெரிதும் பாதிக்கப்படாமை கருதியே இவை வண்ணம் அல்லது வெளிப்பூச்சு எனப்பட்டன.  தமிழ்மொழியைப் பொறுத்தவரை “வடமொழிக் கலப்பைப் பெரும்பகுதியோ அல்லது முழுவதுமாகவோ தமிழ்மொழி தவிர்த்துவிடுதல் கூடும்.  அங்ஙனம் தவிர்த்தலின் மூலமாக அது தூய, மிகச் சிறந்த நிலையை எய்துகிறது”. என்ற கால்டுவெல் ஐயர் அவர்களின் கருத்து இங்கு நினைத்தற்குரியது.  மேற்சுட்டிய ஏற்புநிலை, எதிர்நிலை, ஆதிக்க நிலை என்பனவும் இங்குச் சுட்டிய மூவண்ணப் பூச்சு நிலைகளும் தமிழர், தமிழ் வரலாறு எழுதக் கைக்கொள்ள வேண்டிய நெறிமுறைகளாகும்.

No comments:

Post a Comment