தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

31.12.12

2012 - இல் சிலம்புகளில் வலம் வந்த பதிவுகள்

நம் சிலம்புகள் தமிழ் வலைப்பூ கடந்த 2012 ஆம் ஆண்டில் உதிர்த்த தமிழ்த் தொகுப்புகளை ஒருங்கே உங்களுக்குத் தரும் பதிவே இஃது.  சிலம்புகள் வலைப்பூவிற்குத் தாங்கள் வழங்கிய பேராதரவிற்கு நன்றி!
மு.வா வின் அன்னைக்கு
இணைய தள இடுகைகள் எப்படி அமையலாம்?
முப்பருவத்தேர்வு முறை எப்படி இருக்கிறது? 
திருவள்ளுவர்க்குப் பின்அரசியல் அறம்
வலுப்பெறா ஆமாமியா 

30.12.12

உத்தமம் அமைப்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி


உத்தமத்திற்கு நன்றி - சிலம்புகள் வலைப்பூ
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) ஒரு இலாப நோக்கமற்ற அரசு சாராத பன்னாட்டு அமைப்பு.  தமிழ்க்கணிமையை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்டது.  இரண்டாயிரமாவது ஆண்டில் தன் சேவையைத் துவக்கியது.  கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இவ்வுத்தமம் நிறுவனம் தற்போது பதினொன்றாம் உலகத்தமிழ் இணைய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.  இதற்காக இந்நிறுவனத்திற்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறது சிலம்புகள் வலைப்பூ.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வருகின்ற இக்காலகட்டத்தில் தமிழையும் அதில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கின்றனர்.  இவ்வெண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டுமாயின் உத்தமம் போன்ற நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது; போற்றுதலுக்குரியது.

உத்தமம் நிறுவனத்தின் தலைவராக திரு.மணி.மணிவண்ணன் அவர்களும் செயல் இயக்குனராக திரு.அ.இளங்கோவன் அவர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பலகலையுடன் இணைந்து உத்தமமும் இம்மாநாட்டை நடத்தியுள்ளது.  28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் பல கருத்தரங்குகள், மென்பொருள் கண்காட்சியரங்குகள், கலந்துரையாடல்கள், பொதுமக்களுக்கு இணையத்தை அறிமுகம் செய்தல் எனப் பல நிகழ்வுகள் இம்மாநாட்டில் இடம்பெற்றிருந்தன.

பொதுமக்களுக்குத் தமிழ்க் கணிமை பற்றிப் பயிற்சி தருதல், பரப்புதல், பயிலரங்குகள் மூலம் இளைஞர்களை ஈர்த்தல் ஆண்டுதோறும் நடத்தும் உலகத் தமிழ் இணைய மாநாடுகள், தரப்பாடுகளையும் தொழில்நுட்பங்களையும் விவாதிக்கும் பணிக்குழுக்கள், யூனிகோடு, தமிழ் இணையக் கழகம், மற்றும் பன்னாட்டுத் தரப்பாடு நிறுவனங்கள், அரசு அமைப்புகளோடு ஊடாடுதல் மூலம் தமிழ்க்கணிமைக்கான முக்கியத் தேவைகளை உத்தமம் நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

திரு.வி.கவின் இளமைத் தொண்டு


திருவிகவும் இளம்பருவத் தொண்டும்

திரு.வி.க என்றால் அன்பென்பர்; தொண்டென்பர்; பெண்ணியவாதியென்பர்; ஆன்மிகர் என்பர்; பண்பாளர் என்பர்; பெருமாள் பக்தர் என்பர்; தொழிற்சங்கவாதி என்பர்.  எவரெவர் எப்படி திரு.வி.க வை நோக்கினரோ அவ்வண்ணமே காணப்படுவார் நம் திருவாரூரார்.  தன்னில் விலங்கியல்பு அதிகமாகக் காணப்பட்டதாக அடிக்கடி கூறி வருந்தும் அவர் ஒரு தருணத்தில் விலங்கியல்பை தெய்வ இயல்பு மறிக்கச் செய்தது என்கிறார்.  தெய்வத்தின்பால் அன்பு எழுந்த போது ஆறாக்காதல் கொண்டவராய் மாறினார்.  நித்தமும் மாலை வேளையில் பார்த்தசாரதியைத் தொழாமல் இல்லமடையமாட்டார்.

மாந்தனானவன் விலங்கியல்புகளை விடுத்து மனித இயல்புகளைக் கைவரப்பெற்றாலே சமுதாயம் நன்னிலையை எய்திவிடும்; சென்னிலையை அடையும் என்ற எண்ணங்கொண்டிருந்தார்.
தெய்வ இயல்பைச் சுட்டும்போது அறச்செயலையும் ஒருங்கே சுட்டுதல் தகும்.  ஏனெனில் தெய்வ இயல்பெல்லாமே அறத்தை அடியொட்டியதே.  திரு.வி.கவும் அறச்செயல்களை சிறு பிராயத்திலிருந்தே செய்யத் தொடங்கியிருக்கிறார்; துணிந்திருக்கிறார்.  மற்றவர் அஞ்சி செய்ய இயலாதவற்றை பிறருக்காக என எண்ணி செய்யத் துணிந்தார்.

தன்னுடைய சிறு அகவையில் அவர் செய்யாத குறும்புகளில்லை; அறமுமில்லை.  பின்னாளில் அவர் உதிர்த்த முத்துக்கள் எல்லாம் சிறுவயதில் அவர் மேற்கொண்ட அறவித்துக்களே!
இராயப்பேட்டையில் வசித்தபோது தன்னுடைய இளம்பட்டாளங்களுடன் செய்யாத குறும்புகளில்லை.  அக்குறும்புகள் அனைத்தும் அவர் செய்த அருஞ்செயல்களால் பிறர் அகங்குளிரச் செய்தன. 

சுந்தரேசர் ஆலயத்திற்கென கொட்டப்பட்டிருந்த கட்டுமானத்திற்குண்டான மணல், கோயிலின் முன் கொட்டப்பட்டிருந்தது.  அம்மணலை எடுத்துவந்து கோயிலில் கொட்டுவார் வரவில்லை.  மன்னாத முதலியார் அவர்கள் தாமே அம்மணலை வாரி கோயிலினுள் கொட்டத் தொடங்கினார்.  இதைக் கண்ணுற்றார் திரு.வி.க தன்னுடைய படைகளுடன் கோயிலின் முன் ஒன்று திரண்டார்.  மணல் முழுவதும் கோயிலினுள் சென்றது.  மன்னாத முதலியார் மனமகிழ்வோடு திரு.வி.க வை வாழ்த்தலானார்.  பிறர் தன்னை இவ்வாறு சொல்ல வேண்டும் இவ்வாறு புகழ வேண்டும் என்னும் எண்ணங்கொண்டிருந்திலர் அவர்.  எளியர்; அன்பர்; நட்பாளர்; சிறந்த தொண்டர்; பிரதிபலன் பாராதவர்.

பகட்டு வாழ்க்கையை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை.  நண்பர்களுடன் ஏற்றத்தாழ்வு பார்த்ததில்லை.  பெரிய பாளையத்தம்மன் கோயிலின் முன் எண்ணற்ற பிச்சை ஏற்பவர்கள் இருப்பர்.  அவர்களுள் கூனரும், குருடரும், முடவரும் அடக்கம்.  தம்முடைய அன்றைய நாளை போக்குவதற்காக ஆழ்ந்த அல்லல்களுக்கு ஆட்படும் மானிடராய் வாழ்ந்திருந்தனர்.  இவர்களுக்காகவும் திரு.வி.க தன் தொண்டுள்ளத்தை விரித்துக்காட்டியிருக்கிறார்; அன்பினால் தழுவியிருக்கிறார்; தராதரம் விலக்கியிருக்கிறார்; ஒன்றென்றிரு எனப் புகலச்செய்திருக்கிறார்.

பிச்சை ஏற்பவர்களுக்கெனத் தான் பலரிடம் சென்று அறச்சோறு ஏற்றிருக்கிறார்.  தன்னுடைய இளம்பருவத்தோழர்களுடன் பல்வீதிகளில் அறச்சோறு வேண்டி பிச்சை ஏற்றிருக்கிறார்.  பிறரிடம் தர்மம் பெற பலர் அஞ்சும் போக்கு திரு.வி.கவையும் விட்டுவைக்கவில்லை. இச்செயலை  இழுக்காக எண்ணினார்.  தோற்றுவாயில்தான் அவர் எண்ணம் இப்படிச் சுருங்கியிருந்தது.  பின்னர் பிறருக்காக அறச்சோறு பெறுவதில் இழுக்கில்லை எனத் துணியலானார்; சோற்றுப் பிச்சையேற்றார்; அறச்சோறு பெற்றார். குருடு நிரம்பியும் முடம்பட்டும் அல்லல் பட்டிருந்தோருக்கு அறப்பிச்சை எடுத்து வழங்கினார்.  தெய்வ இயல்பை சிறிதுசிறிதாகக் கைவரப்பெற்றார்.  விலங்கியல்பு மாண்டுபோகத் தொடங்கியது.

29.12.12

தமிழ் இணையப் புத்தகங்கள் இல்லையே!


புதுச்சேரி புத்தகக் கண்காட்சி

புதுச்சேரி ஆனந்தா திருமண நிலையத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி குறித்த பதிவு இது.


கடந்த 24 ஆம் தேதி அன்று தொடங்கப்பெற்ற இக்கண்காட்சி வருகிற 2 ஆம் தேதி சனவரி 2013 வரை நடைபெறவிருக்கிறது.  இக்கண்காட்சியில் 25 விழுக்காடு கழிவு வழங்கப்படுவது மகிழ்தலுக்குரிய செய்தியாகும்.  இந்நல்வாய்ப்பினைப் பலரும் பயன்படுத்திப் பனுவல்கள் வாங்கி வருகின்றனர்.  

புத்தகக் கண்காட்சி குறித்த அறிவிப்பு அவ்வரங்கில் ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது அறிவிக்கப்படுகிறது.  நாள்தோறும் அரங்கு தொடங்கும் நேரம் முடியும் நேரம் புத்தகப் பயனர்கள் எவ்வாறு புத்தகம் வாங்குதல் எவ்வழியாக வருதல் என்பனப் போன்ற அறிவிப்புகள் ஏராளமாய் எடுத்தியம்பப்படுகின்றன.

எண்ணற்ற புத்தகப் பதிப்பகங்கள் தத்தமது புத்தகங்களை அடுக்கி வைத்து விற்பனைக்குக் கொடுத்திருக்கின்றன.  பல இலட்சக்கணக்கான பனுவல்கள் விற்பனைக்கு இலக்காகக் காத்திருக்கின்றன.  இன்முகத்துடன் வரவேற்கும் முகமாய் காத்திருக்கின்றனர் அரங்குகளின் பொறுப்பாளர்கள்.  

நூல் வகை

கலை, இலக்கியம், பொருளாதாரம், அழகுக்குறிப்பு, பொது அறிவு, கணினி, ஆன்மிகம், தத்துவம், பொறியியல், வரலாறு, சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, சமையல், பிறப்பியம், கவிதை, ஒருவரி செய்திகள், கடந்த நிகழ்வுகள், நகைச்சுவை, சுயசரிதை, நீதிக்கதைகள் போன்ற வகைத்தான புத்தகங்கள் ஒருங்கே அடுக்கப்பட்டுள்ளன.

போட்டித் தேர்வு

அழகுக்குறிப்பும்,  சமையல் குறிப்பும் குறித்த நூல்கள் பயனர்களிடையே முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.  இதனினும் சிறந்த இடத்தை மாணாக்கர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள வினா விடை மற்றும் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் புத்தகங்கள் பிடித்துள்ளன.  இம்முறை ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகும் புத்தகங்கள் பெரிதும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 

கணினி நூல்கள்

கணிப்பொறி கற்கும் விதமாக கணினியின் அடிப்படை செயல்பாடுகளான எம்.எஸ்.வேர்டு, எம்.எஸ்.எக்சல், இணையம், பேஜ்மேக்கர், ஃபோட்டோசாப் போன்றவற்றின் குறுந்தகடுகள் விற்பனைக்கு உள்ளன.  அரங்கினுள் நுழைந்தாலே இவை குறித்த ஒலியைக் கேட்காமல் இருக்க முடியாது.  பலர் ஐந்து நிமிடங்கள் செலவு செய்து இது குறித்த காணொளியைக் கண்டு செல்கின்றனர்.

தமிழ் நூல்கள்

தமிழிலக்கியங்கள் குறித்த நூல்கள் பல அளவிறந்த எண்ணிக்கையில் காணக் கிடைக்கின்றன.  புகழ்பெற்ற ஆசிரியர்களின் புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள் விற்பனைக்குள்ளன.  கவிப்பேரரசு வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் புதுவரவுக் கவிதைப் புத்தகமாக அரங்குகளில் முளைத்திருக்கிறது.  வைரமுத்துக் கவிதைகளுக்கென ஓரிடம் ஒதுக்கி அவர்தம் கவிதையாக்கங்களைத் தாங்கி நிற்கும் புத்தகங்கள் ஒருங்கே அடுக்கப்பட்டுள்ளன.

புதுவை எழுத்தாளர்கள்

புதுச்சேரி எழுத்தாளர்களுக்கென ஒரு அரங்கத்திற்கு ஏற்பாடாகியுள்ளது.  இவ்வரங்கில் நம் புதுவை எழுத்தாளர்களின் படைப்புகள் விற்பனைக்கு உள்ளன.  புலவர் பெருந்தேவனின் `திருவள்ளுவருக்குப் பின் அரசியல் அறம்’, திரு.உசேன் அவர்களின் எண்ணற்ற புத்தகங்கள், புதுவை சிவத்தின் புத்தகங்கள்,  புலவர் சீனு இராமச்சந்திரனின் நாடகப் படைப்புகள் முதலியன இடம்பெற்றுள்ளன.

பரிசு

பல வியாபார நிறுவனங்கள் புத்தகம் வாங்குவதை ஊக்குவிக்கும் முகமாக பரிசுகளை வழங்குகின்றன.  புத்தகம் வாங்கிவிட்டு வெளியே வரும்போது நம் கையில் கொடுக்கப்படும் கூப்பனை நிரப்பி பெட்டியில் போடும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.  இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரொக்கமும் புத்தகமும் பரிசாக வழங்கப்படுகிறது.  புதுச்சேரியின் பல முன்னணி நிறுவனங்கள் இப்பரிசினை இலவயமாகப் பயனர்களுக்கு வழங்குகின்றன.

ஏமாற்றம்

தமிழ் இணையம் குறித்த புத்தகங்கள் குறைவாகக் காணப்படுகின்றன.  இணையத்தில் ஏற்றம்பெற்றிருக்கக் கூடிய நம் அருந்தமிழ் இணையத்தில் எவ்வாறு வெற்றிநடை போடுகிறது என்பது குறித்தும் தமிழ் இணையத்தின் எல்லைகள் விரிந்திருப்பது குறித்தும் எண்ணற்ற புத்தகங்கள் பல்லோராலும் படைக்கப்பட்டுள்ளன.  ஆயினும் இது குறித்த புத்தகங்கள் மிக மிகக் குறைவே.  கணிப்பொறியில் தமிழ், கம்ப்யூட்டரில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்கிற இரண்டு நூல்கள் தான் விற்பனைக்கு இருந்தன.  மற்றபடி கணினியைக் கற்றுக்கொள்வது குறித்த புத்தகங்கள் தான் இடம்பெற்றிருந்தன.

எந்த அரங்கில் சென்று தேடினாலும் வினவினாலும் தமிழிணையம் குறித்த புத்தகங்கள் இருப்பதில்லை.  ஒரு சிலர் தாங்கள் நடத்தும் சொந்தக் கடைகளில் இருந்தாலும் வைத்துவிட்டு வந்ததாகச் சொல்கிறார்கள்.  இவ்வளவு தான் தமிழ் இணையம் குறித்த விழிப்புணர்வு,  ஆர்வம் என்று எண்ணத் தோன்றுகிறது.  வேல்சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியிலும் சரி ஆனந்தா திருமண நிலையத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியிலும் சரி பெருத்த ஏமாற்றமே!

இணையத்தில் ஆர்வமுடையவர்கள் தமிழில் ஆர்வமுள்ளவர்கள் இனியாவது தமிழ் இணையம் குறித்த புத்தகங்கள் அதிகம் இடம்பெற உரிய முயற்சி எடுக்க வேண்டும்.

25.12.12

இணைய மாநாடு 2012


உலகத் தமிழ் இணைய மாநாடு - 2012





வரும் 28-12-2012 அன்று சிதம்பரம் அண்ணாமலைப் பலகலைக்கழகத்தில் 11 வது இணைய மாநாடு நடைபெற உள்ளது.  மாநாடானது 28, 29, 30 ஆகிய முன்று நாட்களுக்குச் சீர்மையுடன் நடைபெறுகிறது.  தமிழும் இணையமும் குறித்த மைய நோக்குரை பல்லோராலும் அவ்வமயம் தருவிக்கப்படும்.  


உத்தமமும் அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் ஒன்றிணைந்து இம்மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுச் செயலாக்கத்தில் இறங்கியுள்ளன.  


உத்தமமானது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ பன்னாட்டு நிறுவனாமாகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.  இதுவரையில் பல நாடுகளின் பேராதரவுடன் ஏழு இணைய மாநாடுகளை நடத்தியிருக்கிறது.  தமிழக அரசு இந்நிறுவனத்திற்கு நல்லாதரவு நல்கி தன்பணியாற்றியிருக்கிறது.  தமிழ்நாட்டில் மட்டும் மூன்று முறை இஃது நடத்தப்பட்டுள்ளது.  



தமிழார்வலர்கள் தமிழ் இணைய விரும்பிகள் முதலானோர்களிடமிருந்து பல் தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்பட்டு தேர்வு செய்து மாநாட்டு நாளன்று படிக்கப்படவுள்ளன.

கருத்தரங்குகள் மற்றும் ஆய்வுக்கட்டுரை தொடர்பான நிகழ்வுகளில் முன்கூட்டியே பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.  மற்றபடித்தான கண்காட்சி முதலியவற்றை பொதுமக்கள் அனைவரும் பார்த்துப் பயன்பெறலாம்.

“செல்பேசி மற்றும் பலகைக் கணினிகளில் தமிழ்க் கணிமை” என்ற தலைப்பிலமைந்த கட்டுரைகளை வரவேற்று அது தொடர்பாக ஆய முடிவு செய்யப்பட்டுள்ளது.  இணையத் தமிழில் ஆர்வமுள்ள பலரிடமிருந்து இக்கட்டுரைகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகத் தெரியவருகிறது.  திசம்பர் 20 ஆம் தேதி இக்கட்டுரைகளை ஒப்படைக்க இறுதி நாள் என எல்லையிடப்பட்டுள்ளது.

இணைய மாநாடுகள்,  ஆய்வாளர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், மக்கள் கூடத்தின் மூலம் கணித்தமிழ் நுட்பங்களைப் பரப்புதல், கணித்தமிழ் மென்பொருட்கள் மற்றும் கருவிகளைக் கண்காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  சிதம்பரத்தில் இம்மாநாட்டை நடத்துவதால் கண்காட்சி, மற்றும் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் வளர்ச்சி பற்றிய செய்திகளை சுற்றுப்புற மக்களிடையே எடுத்துச்செல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என ஊகிக்கப்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட தலைப்புகளில் மாநாட்டின் அரங்குகள் நடைபெற உள்ளன:

  • செல்பேசிகள் மற்றும் பலகைக் கணினிகளில், முக்கியமாக ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல்.
  • மின் புத்தகங்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.
  • திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல்.
  • இயன்மொழிப் பகுப்பாய்வு: பிழைதிருத்தி, தமிழ் எழுத்துரு பகுப்பி, ஒலி உணர்தல், தேடுபொறிகள், இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்றவை.
  • தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை: வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல் வலை போன்றவை.
  • தமிழ் தரவுத்தளங்கள்.
  • கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
  • தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்
  • கணினி வழி தமிழ்மொழி பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள்

24.12.12

வா.செ.குழந்தைசாமி என்கிற குலோத்துங்கன்




முனைவர் வா.செ.குழந்தைசாமி
கரூர் மாவட்டத்தில் வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர்.  இந்தியா, செர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கல்வி பயின்றவர்.  நீர்வளத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.

முனைவர் வ.செ.குழந்தைசாமி

புகைப்படத்திற்காக நன்றி - விக்கிபீடியா


வகித்த பதவிகள்:

நீர்வளத் துறைப் பேராசிரியராகவும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும், யூனெசுகோ ஆலோசகராகவும், இந்திராகாந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநராகவும் பதவி வகித்தவர்.

நீர்வளத்துறை:

நீர்வளத் துறையில் நன்கு தேர்ந்த அறிவைப் பெற்றவர்.  இதனால் எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளார்.  பன்னாட்டவரும் புகழும் படியான ஆய்வுகளை இத்துறையில் மேற்கொண்டதனால் பலரின் பாராட்டையும் ஒருங்கே பெற்றவர்.

அறிவியல் தமிழ்:

அறிவியலில் ஆறாத ஆர்வம் கொண்ட வா.செ.கு அவர்கள் அறிவியல் தமிழ் குறித்து  பல நூல்களைப் படைத்துள்ளார்.  பல கல்லூரிகளில் இவரின் நூல்கள் பாடமாக இடம்பெற்றுள்ளன.

பல்கலைக் கழக மானியக் குழு, அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழக, அனைத்திந்தியத் தொழில் பயிற்சிக் கல்விக் குழு, தமிழகத் திட்டக் குழுமம் போன்ற பல நிறுவனங்களில் உறுப்பினராக இருந்தவர்.  சர்வ தேசியத் தொலை நிலைக் கல்விக் கழகத்தில் ஆசியாவின் துணைத் தலைவராகவும், காமன்வெல்த் நாடுகளின் பல்கலைக் கழகக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியவர்.

விருதுகள்:

இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது (1988), மைய வேளாண்மை வாரியத்தின் வைர விழாச் சிறப்பு விருது (1991) மற்றும் இந்திய பொறியியலாளர் நிறுவனம் இவரை இந்தியாவின் சிறந்த பொறியியல் வல்லுநர்களில் ஒருவராக 1991 இல் பெருமைப்படுத்தியது.

இவர் தமிழ் வளர்ச்சி, தமிழிலக்கியம், தமிழ் எழுத்து சீரமைப்பு முதலிய துறைகளில் ஆர்வங்கொண்டவர்.  இவை தொடர்பான நுல்களையும் படைத்துள்ளார்.

தமிழ் எழுத்துச் சீரமைப்பு குறித்த இவரின் நூல் ஒரு பார்வை:

இந்நூலில் இந்நூலின் தேவை குறித்தும் எழுத்துகளைக் குறைப்பதன்று என்பது பற்றியும் புதிய ஒலிகளைப் புகுத்துவது தேவயற்றது என்பனப் போன்ற தலைப்புகளில் கட்டுரைக்கப்பட்டுள்ளது.
 இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக பேராசிரியர் தெ.பொ.மீ, பேராசிரியர் மு.வ, தமிழறிஞர் கி.வா.ஜ., பேராசிரியர் வ.சுப.மாணிக்கம், சிலம்புச் செல்வர், டாக்டர் கலைஞர், தமிழகப் புலவர் குழு முதலியோரின் கருத்துக்களை இடம்பெறச் செய்துள்ளார்.

புதிய ஒலிகளைப் புகுத்துவது தேவயற்றது:

``தமிழில் 247 ஒலியெழுத்துகள் உள்ளன.  உலகின் பல மொழிகளிலும் உருவாக்கப்படும் கருத்துகளை, தத்துவங்களை, அவற்றோடு தொடர்புடைய பெயர்களைத் தமிழில் எழுதுவதற்குத் தமிழ் நெடுங்கணக்கில் இருக்கும் ஒலிகள் போதாவென்று வாதிடுவோர் உளர்.  இதனடிப்படையில் தான் கிரந்த எழுத்துகள் நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டன.  இன்றும் பலரால் பயன்படுத்தப்படுகின்றன.  இக்கருத்திலேதான் ‘ஃப்’ என்ற சேர்கை பயன்படுத்தப்படுகிறது.  இவற்றை எதிர்ப்பாரும் உண்டு; ஏற்பாரும் உண்டு.  இதுவும் ஒரு முக்கியமான பிரச்சினையே எனினும் இது நாம் எடுத்துக்கொண்ட சீர்மைப்பினின்றும் வேறுபட்டது; தனிப்பட்டது.  புதிய ஒலிகளின் தேவை பற்றிய வாதம், எதிர்ப்பு ஆகியன எழுத்துச் சீர்திருத்த இயக்கத்தின் ஒரு பகுதியன்று” என்று கூறுகிறார். 






20.12.12

முடியரசன் பார்வையில் உண்மைக் கவிஞன் யார்?

கவிஞர் கவியரசு முடியரசன்
இவரின் பெற்றோர் சுப்பராயலு- சீதாலட்சுமி ஆவர்.  பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் துரைராசு என்பதாகும்.  தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளத்தில் 07-10-1920 அன்று பிறந்தார்.  காரைக்குடியிலுள்ள மீனாட்சிசுந்தரனார் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

முடியரசன், பாரதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞர்களுள் மூத்தவர் என அழைக்கப்படுகிறார்.  தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலியோரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.

பறம்பு மலையில் நடைபெற்ற விழாவில் ‘கவியரசு’ என்னும் பட்டத்தை, குன்றக்குடி அடிகளார் இவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.  1996 ஆம் ஆண்டு இவரின் பூங்கொடி காவியத்திற்காகத் தமிழக அரசு பரிசு வழங்கிப் பாராட்டியது.

வீரகாவியம், முடியரசன் கவிதைகள், பூங்கொடி முதலிய காவியங்களை இவர் படைத்துள்ளார்.  தமிழ் மொழி வளர தமிழை வாழ்த்தி இவர் பாடும் பாடல் நம்மை தமிழ்ப்பற்றுக்கு இலக்காக்கி ஈர்த்துச் சென்றுவிடும்.

தாயே உயிரே தமிழே நினைவணங்கும்
சேயேன் பெறற்கரிய செல்வமே - நீயே
தலைனின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீ இங்கு
இலை என்றால் இன்பம் எனக்கு ஏது?

உண்மைக் கவிஞன் யார் என்பதைப் பின்வரும் பாடலில் உறுதி செய்கிறார்.

‘ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும்
     ஆள்க எனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபடுவன் கவிஞன் ஆவன்
    மேலோங்கு கொடுமைகளைக் காணும் போது 
கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்
     காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக்
கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்
    தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்
தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்’

அன்புள்ள பாண்டியனுக்கு, நெஞ்சு பொறுக்குவில்லையே, பாடுங்குயில், ஞாயிறும் திங்களும், தமிழ் முழக்கம், வள்ளுவர் கோட்டம், தாய்மொழி காப்போம், எக்கோவின் காதல், எப்படி வளரும் தமிழ், மனிதரைக் கண்டுகொண்டேன், நெஞ்சிற்பூத்தவை, புதியதொரு விதி செய்வோம் முதலிய படைப்புகளோடு காவியப் பாவை, முடியரசன் கவிதைகள், கவியரங்கில் முடியரசன் ஆகிய காவியங்களையும் படைத்துள்ளார்.

முடியரசன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு கலைஞர் விருதும் 1987 ஆம் ஆண்டு பாவேந்தர் விருதும் 1998 ஆம் ஆண்டு கலைமாமணி விருதும் 1993 இல் அரசர் முத்தையாவேள் அவர்களின் நினைவுப் பரிசும் பெற்றார்.

இவரின் படைப்புகள் சாகித்திய அகாதெமியினால் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் இவருடைய படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளதோடு படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

திரைப்படங்களுக்குப் பாடல் மற்றும் கதை வசனம் எழுதி திரைத்துறைக்கு அரும்பணியாற்றினார்.  சில காலம் மதுரை காமராசர் பலகலைக்கழகத்தின் தமிழியற் துறையில் பணியாற்றியுள்ளார்.

14.12.12

இணையம் குறித்த பெருந்தேவன் குறட்பாக்கள் - நல்ல சாட்டையடி!

புலவர் பெருந்தேவன் -  புதுச்சேரி
 சி. இராமலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட இப்புலவர் புகழ்பெற்ற தமிழாசிரியர்.  புதுவைப் பாவலர் பண்ணையில் யாப்பிலக்கணம் பயின்று ‘பைந்தமிழ்ப் பாவலர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர்.  சந்தம், வண்ணம், சிந்து, உருப்படி ஆகிய இசைப்பாடல் வகைகளுக்கு இலக்கணந்தெரிந்து படைக்கவல்ல பாவலர்கள் மிகச் சிலரே தமிழ் கூறு நல்லுலகத்தில் இன்று காணப்படுகின்றனர்.  அவர்களில் இவரும் ஒருவர்.  தெளிதமிழ் இதழ் நடத்தும் பாவலர் பரிசுத் திட்டத்தில் பாட்டெழுதி முதற்பரிசு பெற்றவர்.  “சித்தானந்த அடிகள் திருவருட்பனுவல் திரட்டு” , அறிவுலகக் காவலர்கள், ஆசிரியர் அறம் முதலிய நூல்களின் ஆசிரியர்.  புதுவை அரசின் நல்லாசிரியர் எனும் சிறப்புப் பட்டம் பெற்றவர்.  ஆசிரியப் பணி, அரசியற்பணி முதலிய எல்லாத்துறைகளிலும் அறத்தை வற்புறுத்துவதில் அடங்காத வேட்கையுடைய ஆன்றவிந்தடங்கிய சான்றோராய்த் திகழ்பவர்.  அவர்தம் உள்ளத்தில் அவ்வப்போது மண்டியெழும் அறக்கருத்துகளின் வெளிப்பாடாக இந்நூல் அமைந்துள்ளது.

குறள் வடிவத்தை அடியொட்டி புலவர் பெருந்தேவன் அவர்கள் `அரசியல் அறம்’ என்கிற நூலை யாத்துள்ளார். இந்நூலில் இணைய மேம்பாடு குறித்து அவர் நுட்பமான கருத்துக்களை முன் வைக்கிறார்.  அக்கருத்துக்களைப் பாடல் வரிகளோடு இங்கே அடுக்கலாம்.

அங்கைக் கனிபோல் அறிதல் எளிதாகும்
இங்கிணையத் தாலுலகம் என்

இணையதள மேம்பாட்டால் இவ்வுலகத்தை உள்ளங்கைக் கனியைப் போல் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

ஆடலாம் பேசி அரட்டை அடிக்கலாம்
தேடலாம் இங்கிணையத் தில்

விளையாடலாம், பேசலாம், அரட்டை அடிக்கலாம், பாடத்திட்டக் கட்டண விவரம், மருத்துவக் குறிப்பு, வேலைக்கான கல்வித் தகுதி, ஆய்வுக் கட்டுரை முதலியவற்றை இருந்த இடத்தில் இருந்தபடியே இணையத்தின் மூலம்  தேடிக் கண்டறியலாம்.

இணையத் தொழில்நுட்பம் இல்லாயின் இல்லை
துணைவே றுலகோர்க்குச் சொல்

இணையதளத் தொழில்நுட்பம் இல்லாம்ல் போகுமானால் இவ்வுலகத்தவர்க்கு அவ்விணையத்திற்கிணையான துணை வேறு இல்லையாகும்.

இணையம் கணினி எனுமிவ் விரண்டின்
துணைகொண் டறிவைத் துலக்கு

இணையம், கணினி ஆகிய இரண்டு தொழில் நுட்பங்களின் துணையை நன்முறையில் பயன்ப்டுத்திக் கொண்டு அனைவரும் தமது அறிவை விரிவு செய்து கொள்ள வேண்டும்.

இணையம் தீதும் நன்றும்
இணைய வழிப்பயன்கள் எய்தார் எய்தார் 
அணிசேர் அறிவினொளி ஆம்

இணைய தளத்தின் மூலம் சிறந்த பயனை அடையாதவர்கள் அழகு மிகுந்த அறிவின் ஒளியைப் பெறமாட்டாதவராவார்கள்.

இணையிங்கிலாத திணையம் அதனின்
துணையால் பெருகும் தொழில்

ஈடுஇணையற்றது இணையம், அதன் துணையால் உலகில் பலவகத் தொழில்களும் பெருவளர்ச்சி காணமுடியும்.

குமுக வலைத்தளத்தின் கோணல் குறும்பால்
அமிழும் மணங்கள் அறுந்து.

நட்பினைத் தேடுவோர் கூடும் சமூக வலைத்தளத்தில் நம்பகத்தன்மை இருப்பதில்லை.  எச்சரிக்கை உணர்வு இன்மையால் மோசடிகளுக்காளாகித் திருமண உறவே அறுந்து போதலும் உண்டு.

தங்கு தடையின்றித் தகவல் பரிமாற 
இங்குதவும் நல்லிணையம் என்.

இவ்வுலக மக்களின் தங்குதடையற்ற செய்திப் பரிமாற்றத்திற்கு உதவக்கூடியது நலம்சார்ந்த இணையமே ஆகும்.

நட்பினைத் தேடுவோர் நாடும் வலைத்தளத்தால்
ஒட்பம் கெடலுண் டுணர்.

தமது நட்பு வட்டத்தை விரிவுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்புபவர் சமூக வலைத்தளங்களில் மனந்திறந்து பேசுவதும் புகைப்படம் வெளியிடுவதும் ஆகியவற்றால் நல்லறிவு கெட்டுப்போதலும் உண்டு.

வலைத்தளக் கண்கணிப்பால் வாழ்வை இழந்திங்(கு)
அலைபடுவார் உள்ளார் அறி

மணமகன் மணமகள் இருவரும் சமூக வலைத்தளத்தில் மேற்கொண்டுள்ள நட்புவட்டம் கண்காணிக்கப்படுவதால் அவர் தமக்குள் பிணக்கு ஏற்பட்டுப் பிரிந்து துன்பப்படுபவர்களும் இங்குச் சிலர் உள்ளனர்.

9.12.12

வரலாறு படைக்கும் வரலாறு இணைய இதழ்

வரலாறு இணைய இதழின் தோற்றப் படம்
வரலாற்றுச் செய்திகளுக்குத் தனித்துவம் கொடுத்து வெளிவந்து கொண்டிருக்கும் இணைய இதழே ‘வராலாறு.காம்’.  `இணையம் வழி வளரும் வரலாற்றுப் பயணம்’  என்று இவ்விதழின் போக்கு விளக்கப்பட்டிருக்கிறது.  23.10.2012 வரை 88 இதழ்கள் இணையத்தில் விரிந்துள்ளன. தற்போது  90 ஆவது இதழ் வெளியிடப்பட்டுள்ளது.  இதுவரை படைத்த படைப்புகளின் எண்ணிக்கையும் சொல்லப்பட்டுள்ளது.

ஆகத்து 15, 2004ஆம் ஆண்டு திருவாளர்கள் சீத்தாராமன், இராம், இலாவண்யா, கமல், கிருபா சங்கர், கோகுல் என்பவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.  பெரிதும் இவர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.  ஆசிரியர் குழுவாக இவர்களே செயல்படுகின்றனர்.  இவ்வாசிரியர் குழுவில் பெரும்பான்மையினர் வரலாறு முடித்துத் தேர்ந்த வல்லாளர்கள்.

தவறாமல் தலையங்கம் ஒன்று இடம்பெற்று சாட்டையடி கொடுக்கிறது.  ‘கதை நேரம்’ என்ற பகுதியில் கதையும் ‘கலையும் ஆய்வும்’ என்ற பகுதியில் தமிழகக் கலைகள் பற்றிய ஆய்வும் இடம்பெற்றுள்ளன.  `இலக்கிய ஆய்வும்’ இலக்கிய விரும்பிகளுக்காகப் படைக்கப்பட்டுப் பரிமாறப்படுகிறது.

இவ்விதழில் கட்டடக்கலை குறித்து கமலக்கண்ணன் என்பவர் தொடர்ந்து எழுதி வருகிறார்.  கதைநேரம் பகுதியை கோகுல் செதுக்கித் தருகிறார்.  கிருபாசங்கர் என்பவர் தளத்தின் வடிவமைப்புப் பணிகளைக் கவனித்துக் கொண்டு புதிய மென்பொருள் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்.  இவரின் ‘கடலை மிட்டாய்’ என்கிற மென்பொருள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தமிழ் எழுத்துக்களாக மாறி ஒருங்குறி வடிவம் கொள்கிறது.  எ.கலப்பை, என்.எச்.எம் எழுதிகளை போன்றது எனலாம்.
மொத்தத்தில் வரலாறு.காம் வாசிக்கத் தகவு பெற்ற வரலாற்றுச் செய்திப் பெட்டகம்.

6.12.12

சிறு பத்திரிகைகள் சந்தித்த சவால்கள்


www.silambukal.blogspot.com
தமிழில் வெளிவந்த சிறுபத்திரிகைகள் பல காலப்போக்கில் மறைந்து போனதன் ஆழ்காரணம் என்னவாக இருக்கும் என்பதே இப்பதிவின் ஆராய்வு.

தமிழில் பல பத்திரிகைகள் இன்று நாளேடுகளாக வந்துகொண்டிருக்கின்றன.  இவை பல வாசகர்களைக் கொண்டிருக்கின்றன.  ஊடகங்களின்  வழியாகப் பல நாளிதழ்கள் விளம்பரப்படுத்தப்பட்டும் குறிப்பிட்ட நாளிதழ்கள் தத்தமது இதழிலேயே தம் இதழ் குறித்து விளம்பரப்படுத்தியும் வருகின்றன.

சிறு பத்திரிகைகள் வளர்வதற்கு நிதி ஒரு முக்கியப் பங்காற்றியது.  நிதியுதவி பெற்றே பல சிற்றிதழ்கள் வெளிவந்தன.  பெரும்பணக்காரர்கள் (தமிழார்வம்  கொண்டவர்) என்ற வகையினரும் தமிழுக்காக உதவும் மனப்பான்மை கொண்டோருமே இச்சிறு பத்திரிகைகளுக்கு நிதியளித்து வெளிவர ஏதுவாகினர்.

சில தமிழார்வலர்கள் நான் பத்திரிக்கை தொடங்குகிறேன் பேர்வழி என்று வெகுண்டெழுந்து ஆறு மாதம் கூட தாக்குப்பிடிக்காமல் மூட்டைக்கட்டிய நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கிறது.  பத்திரிக்கை வரலாற்றுலகில் தொடர்ந்து வெளிவந்த சிறுபத்திரிகைகள் மிகவும் சொற்பமே!

திரு.புதுமைப்பித்தன், திரு.கு.ப.ராஜகோபாலன்,திரு.ந.ச்சமூர்த்தி போன்றோர் 1930 வாக்குகளில் சிறு பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்தனர்.  சொக்கலிங்கம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு `ஊழியன்’ என்னும் பத்திரிகை வெளிவந்தது.  

இக்காலகட்டத்தில் வெளிவந்த மற்றுமொரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பத்திரிகை மணிக்கொடியாகும்.  இப்பத்திரிகை தான் பலரின் கலை தாகத்தைப் போக்கியது.  இப்பத்திரிகைக்குச் சிறுகதை தான் பிரதானம்.  மக்களிடையே நன் வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும்  மாதம் இரு முறை வெளிவந்த மணிக்கொடியின் பொருளாதார நிலை சொல்லுமளவிற்கு ஏற்றம் பெறவில்லை.  இதனால் நான்கு ஐந்து ஆண்டுகளில் நின்று போய்விட்டது.

கி.ரா, எம்.வி.வெங்கட்ராமன், லா.ச. ராமாமிர்தம், ஆர்.சண்முகசுந்தரம் போன்றோர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது மணிக்கொடியே.

தொடக்க காலத்தில் மணிக்கொடி பல அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளைச் சாடி வெளிவந்தது; பிந்தைய காலத்தில் தான் சிறுகதை வளர்ச்சிக்கு வழிசெய்து நின்றது.

இப்படிப்பட்ட மணிக்கொடியின் ஏடுகள் கூட ஆயிரக்கணக்கிலும் இலட்சக்கணக்கிலும் வெளிவரவில்லை.  ஏனெனில் சில நூறு ஏடுகள் வெளியிட்டாலும் அதை வாங்கிப்படிப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவே.  இச்சூழல் தான் பல பத்திரிகைகளை தவிடுபொடியாக்கியது.  நிதியைப் போட்டு பத்திரிகை நடத்துவோர் இலாபத்தை எதிர்பார்க்கவே கூடாது என்னும் நிலை ஏற்பட்டது.  எத்தனை முறை முதலீடு செய்தாலும் பத்திரிகையின் ஓட்டம் முன்பு இருந்த நிலையைவிட குறைந்தேயிருந்தது.  இவ்வாறான பத்திரிகை தொழில் பலரது வாழ்வில் ஏற்றத்தை மிகுவிப்பதற்குப் பதில் தப்பித்தோம் பிழைத்தோம் என்னும் நிலைமையையே ஏற்படுத்தியது.

 "பத்திரிகைகள் நடத்தி இலாபம் கண்டோர்,  பேப்பர் கடை காரரும் பிரஸ் வைத்திருப்போருமே தவிர பத்திரிகை நடத்துவோரல்ல" என்பார் திரு.வல்லிக்கண்ணன்.

முடிப்பாகச் சொல்ல வேண்டுமாயின் நிதி ஒன்று மட்டும் சிறு பத்திரிகைகள் நலிந்து போகக் காரணம் இல்லை.  வாசகர் வட்டம் குறைவாக இருந்ததும் தமிழ் மீது ஆர்வங்கொண்டோர் குறைவாக இருந்ததும் அப்படித் தமிழார்வம் இருந்தாலும் வாங்கும் எண்ணமிலார் இருந்ததும் காரணமாக இருந்துள்ளன.

தொடருவோம் ............. (2)








3.12.12

கா.சு.பிள்ளை

கா.சுப்பிரமணியம் பிள்ளை

நம் சிலம்புகள் வலைப்பூவில் தமிழ் வளர்க்கப் பாடுபட்டவர்களைப் பற்றி பல்தொகுப்புகள் பதிவாக இடம்பெற்றிருக்கின்றன.  பலரும் இம்முயற்சி கண்டு வாழ்த்துத் தெரிவித்து மேலும் முயலுமாறு வேண்டி நின்றனர்.  இவர்களின் ஏகஊக்கங்கண்டு வியந்த நான் மேலும் பலரது வரலாற்றை இவ்வலைப்பூவில் யாக்க முற்பட்டுள்ளேன்.  இத்தொகுப்பில் ஒரு படியாக  நாம் அறிய இருக்கும் தமிழறிஞர் திரு.கா.சுப்பிரமணியப் பிள்ளை ஆவார்.

1888 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 5ஆம் நாள் தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் காந்திமதிநாத பிள்ளை, மீனாட்சியம்மை தம்பதியினருக்கு மகனாய்த் தோன்றினார். 1906ஆம்  ஆண்டு மெட்ரிகுலேசன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.  மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய புலவர் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 1910 ஆம் ஆண்டு வரலாறு பாடத்தில் இளங்கலையும் 1913ஆம் ஆண்டு ஆங்கில இலக்கியத்தில் முதுகலையும், 1914 ஆம் ஆண்டு இறுதியில் தமிழிலக்கியத்தில் முதுகலையும் பெற்றார்.  இவர் சட்டம் பயின்று 1917 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றதோடு முதன் முதலில் எம்.எல் பட்டம் பெற்றவர் என்ற சிறப்புக்கும் உரியவர்.


 திரு.சுப்பிரமணியப் பிள்ளைஅவர்களை அனைவரும் கா.சு.பிள்ளை என்றே அழைத்தனர்.  தமிழில் மிகுந்த புலமை பெற்றவராக இருந்ததோடு சட்டப்படிப்பிலும் தன்னுடைய முத்திரையைப் பதித்தவர்.  சட்டத்தில் முதுகலையான எம்.எல் பட்டம் பெற்றதனால் `எம்.எல். பிள்ளை’  என்றும் சிலர் அழைத்தனர்.  

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய இவர் தமிழ் இலக்கிய வரலாறு ஒன்றை மிகத்திருத்தமாய் ஆக்கினார்.  இஃது அனைவராலும் வெகுவாய் பாராட்டப்பட்டது.  

பல ஆய்வுகளை மேற்கொண்டு பல்கருத்துக்களை வழங்கியிருக்கிறார்.  இவரின் கருத்துக்கு மாறுபட்டு நிற்போரும் இருப்பதாகத் தெரிய வருகிறது.  தமிழ் மொழியில் நூல் யாத்ததோடன்றி ஆங்கிலத்திலும் ஏற்ற புலமை பெற்று நூல் சமைத்தார்.  இவர் இயற்றிய நூல்களுள் `தமிழர் சமயம்’ என்பதுவும் ஒன்றாகும்.



30.11.12

ஈசி தமிழ் எழுத்துரு தந்த புதுவை முத்துக்கருப்பன்

ஆசிரியர் முத்துக்கருப்பன்

நம் தமிழ் குறித்த பதிவுகள் அதிகம் வலம்வரத் தொடங்கிய காலகட்டம் தமிழ் எழுதிகள் அதிகம் வெளிவந்த காலகட்டம் என்றால் அது மிகையல்ல.  கணினி வந்த பின்னர் அதன் ஆதிக்கம் அவ்வளவாக எடுபடாமல் இருந்தது.  அதன் ஆதிக்கம் ஓங்கி வளரத்தொடங்கியபோது ஆங்கிலம்தான் கணினியின் முக்கிய மொழியாக விளங்கிற்று.  பல்லோர் ஆங்கிலத்திலேயே பல தகவல்களைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர்.

நாடு கடந்து வாழும் அயலகத் தமிழர்கள் தத்தமது உறவினர்களுடன் உறவாட மொழிக்கருவி (ஆங்கிலம் போன்று) இல்லாதது கண்டு அயர்ந்திருந்தனர்.  ஒரு சில தொழில்நுட்ப அறிவு வாய்க்கப்பெற்றவர்கள் கணினிசார் கல்வியைப் பயின்றவர்கள் அயல்நாடுகளில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் உறவாட ஏற்ற மொழிக்கருவியை அஃதாவது தமிழ் எழுத்துருவை உருவாக்க எண்ணினர்.  அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திரு.கு.கல்யாணசுந்தரம் (நிறுவனர்:மதுரைத் தமிழிலக்கிய மின் தொகுப்புத் திட்டம்).  இவரின் மயிலை எழுத்துரு கண்டுபிடிப்பு பலராலும் பாராட்டும் படியாக இருந்தது.

தமிழ் எழுத்துருக்கள் அப்போது ஒருங்குகுறி வடிவத்தில் அமையப்பெற்றவை அல்ல.  குறிப்பிட்ட ஒரு கணினியில் மட்டும் செயல்படக் கூடியவையாக மட்டுமே அவை இருந்தன.  மற்றொரு கணினியில் எழுத்துருவைக் காண அக்குறிப்பிட்ட எழுத்துருவை ஏற்றம் செய்தல் வேண்டும்.  அப்பொழுதுதான் எழுத்துக்களைத் தெளிவாகக் காண இயலும்.  இந்நிலை மாய்ந்து அனைத்துக் கணினியும் எளிதில் எழுத்துருவை அடையாளங் கண்டு தமிழெழுத்தை வெளிப்படுத்திக்காட்ட  வந்ததே ஒருங்குறி வடிவம்.

இன்று பெரும்பாலான தமிழன்பர்களால் தமிழ் இணைய விரும்பிகளால் பயன்படுத்தப்படுகிற எழுத்துரு ஒருங்குகுறி எழுத்துருவே.  அவ்வகையில் ஒருங்குகுறி எழுத்துருவை உருவாக்கியவர்களுக்கு மகுடம் சூட்டிப் பார்க்க வேண்டுவது நம் கடமையல்லவா?!

புதுச்சேரியை இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வரும் அரசு பள்ளி ஆசிரியர் திரு.முத்துக்கருப்பனின் `ஈசி தமிழ்’என்னும் தமிழ் எழுத்துருவைப் பலருக்கு அறிமுகம் செய்வதே இப்பதிவின் இலக்கு.

முத்துக்கருப்பன் அவர்கள் தற்போது புதுச்சேரியிலுள்ள முத்தியாலுப்பேட்டையில் வசித்து வருகிறார்.  அழகுக் குழந்தை ஒன்றுடனும் ஆருயிர் துணைவியாருடனும் பேணிக்காத்த பெற்றோருடனும் உடன் உறவாடிய உடன்பிறப்புக்களுடனும் தான் செய்த சாதனை தெரியாமல் அமைதியாய் வாழ்ந்து வருகிறார்.  

தமிழில் எழுத வேண்டும் தமிழ் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும் தமிழில் மின்னஞ்சல் செய்ய வேண்டும் என்னுந்தாகமுடையவர்களுக்குத் தான் முத்துக்கருப்பன் தந்த ஈசி தமிழ் மென்பொருளின் அருமை புரியும்.

இவரின் தந்தை திரு.பரமசிவம், தாயார் திருமதி.சந்திரா அம்மையார்.  தந்தை நேருவீதியில் இயங்கிவரும் கடையொன்றில் முக்கியப் பொறுப்பில் இருந்துவருகிறார்.  ஆசிரியர் முத்துக்கருப்பன் சிறுவனாக இருந்தபோதிலே இவர் இப்பொறுப்பில் இருந்திருக்கிறார்.  தாயார் இல்லத்தைக் கட்டிக் காக்கும் குடும்பத் தலைவியாய் தன்கடன் ஆற்றியவர்.  இப்பொழுதும் அப்படித்தான்.

ஆசிரியர் முத்துக்கருப்பன் தன்னுடைய மேனிலைக்கல்வியை வ.உ.சி மேனிலைப் பள்ளியில் பெற்றிருக்கிறார்.  சாதாரண மாணவரோ அல்லது கடைநிலையான மாணவரோ என்று இவரை நினைக்க வேண்டாம்.  தன்னுடைய பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 1200 மதிப்பெண்ணுக்கு 1039 மதிப்பெண்கள் பெற்றவர்.  மேனிலையில் (+2) கணினித் துறையை தன்னுடைய விருப்பப்பாடமாகப் பயின்றார்.  ஆசிரியை திருமதி.அமராவதி அவர்களின் அரும்பெரும் ஊக்கமே இவரை நன்கு சிந்திக்கக் கூடிய மாணவராக ஆக்கியதாகச் சொல்கிறார்.

ஆசிரியை அவர்கள் கொடுத்த ஊக்கத்தின் விளைவாக புதுவை உரோமண்ட் உரோலண்ட் நூலகத்தை ஆசிரியர் முத்துக்கருப்பன் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்.  `ஜி.டபிள்யூ. பேசிக்'  என்னும் நூலை ஆய்ந்திருக்கிறார்.  அந்நூலே இவருக்கு சுயமாகக் கணினி செயல்பாடுகளை  உருவாக்கும் வித்தையை மனதில் விதைத்திருக்கிறது.  இதன் விளைவாக மேனிலைக் கல்வி இரண்டாமாண்டில் கணினி அறிவியல் தேர்வில் 200க்கு 196 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.

தன்னுடைய மேனிலைக் கல்வியை முடித்த பின்னர் கணினி குறித்தத் தேடல்களில் ஈடுபடலானார்.  `தமிழ் கம்ப்யூட்டர்'  என்னும் 2 வாரத்திற்கு ஒருமுறை வரும் இதழை வாங்கிப் படிக்கத் தொடங்கியிருக்கிறார்.  இதன் அப்போதைய விலை பத்து உரூபாய்.  மாதத்தின் முதல் நாளும் பதினைந்தாம் நாளும் வரும் இவ்விதழ் முற்றிலும் கணினி சார்ந்ததோடல்லாமல் தமிழிலும் அமையப்பெற்றிருக்கும். `டிஜிட்’ என்னும் இதழும் இவரின் தேடலிலிருந்துத் தப்ப முடியவில்லை.   இவற்றை நன்கு பயன்படுத்திக்கொண்டு ஆசிரியர் முத்துக்கருப்பன் தன்னுடைய கணினி குறித்த அறிவை மேம்படுத்தியிருக்கிறார்.

பல கணினி சார் கட்டளைகள்,  செயல்பாடுகள் குறித்து அறிவதற்காக பன்முறை பல இணைய வழங்கி நிலையங்களை நாடினார்.  அப்பொழுது அங்கு ஒரு மணி நேரத்திற்கு முப்பது உரூபாய் வசூலித்திருக்கிறார்கள்.  இது அப்போதைக்கு அதிக தொகை என்றாலும் இணையம் அதிகம் வலுவடையாத காலம் அது.

இதனிடையே மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் நடத்தப்பெறும் பல தேர்வுகளை எழுதி வெற்றியும் கண்டுள்ளார்.  புதுச்சேரியிலுள்ள ஒரு கணினி பயிற்சி மையத்தில் சில காலம் ‘சி’ ,  `வன்பொருள் மற்றும் இணையம்'  சார்ந்த பயிற்சியையும் ஒருங்கே பயின்றார்.  இதன் விளைவாகத்தான் மைக்ரோசாப்ட்  நிறுவனத் தேர்வை எதிர்கொள்ளத் துணிந்தார்.  இத்தேர்வு அப்போது புதுச்சேரியில் நடத்தப்பெறவில்லை.  சென்னைக்குச் சென்றுதான் எழுதுதல் வேண்டும்.  சென்னையிலும் இணையத்தின் வழியாகவே எழுதுதல் வேண்டும்.  இதற்காகச் சென்னை வரை சென்று ஒரு மையத்தைத் தேர்ந்தெடுத்து தனிமைப்படுத்தப்பட்ட (முறைகேடுகளைத் தவிர்க்க வேண்டி) அறையில் தேர்வெழுதியிருக்கிறார்.

இதுவரை இவர்  மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் நடத்தப்பட்ட பின்வரும் தேர்வுகளில் தோன்றி வெற்றிக் கனியைப் பறித்துள்ளார்.  இத்தேர்வுக்கு இவர் ஆயத்தமான செய்திகளை நமக்குச் சொல்லும் போது கேட்க மிகவும் மலைப்பாக உள்ளது.

1.எம்.சி.பி
2.எம்.சி.எஸ்.ஏ  (மைக்ரோசாப்ட் சர்டிபைடு சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேடர்)
3. 2003 சர்வர் இல் எம்.சி.எஸ்.ஏ
4.எம்.சி.ஐ.டி.பி
5.எம்.சி.எஸ்.இ
என்னும் சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறார்.

அடுத்த பதிவில். . . . . . .  . . . . . . . .(2)

(இன்னும் வரும்)

அனைத்துத் தேர்வுகளிலும் வெற்றி பெற்ற திரு.முத்துக்கருப்பன், பின்னாளில் ஈசி தமிழ் என்னும் தமிழ் எழுதியை அறிமுகம் செய்தது எப்படி?