தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

21.7.13

திரு.வி.க வின் பொன்மொழிகள் - 1

பொன்மொழிகள்
திரு.வி.க அவர்கள் தன் வாழ்நாளில் உதிர்த்தவை எல்லாமே பொன்னேடுகளில் பொறிக்கத்தக்கவை.  அவைகளுள் முத்தென விளங்கும் பொன்மொழிகள் இங்கு அடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டுமாயின் தமிழ் மக்கள் முதலாவது தங்கள் மொழியினிடத்துப் பற்றுக்கொள்ளல் வேண்டும்.  தமிழ் மக்கள் எம்மதத்தைப் பற்றி ஒழுகினும் ஒழுகுக அவர்கள் மொழிப்பற்றை மட்டும் விடுதலாகாது.
 
பெற்ற தாயின் அன்புக்கும் பிறந்த நாட்டின் பற்றுக்கும் ஊற்றாயிருப்பது பேசும் மொழியே ஆகும்.  பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் , தாயையும் நாட்டையும் பழித்தவனாவான்.
 
தமிழ் மகனே! விடுதலை விடுதலை என்று வெறுங் கூச்சலிடுவதால் பயன் என்ன?  விடுதலை முயற்சி விடுதலை தருவதாயிருத்தல் வேண்டும்.  விடுதலை விடுதலை என்று சிறைக்கூடத்தில் நோய்வாய்பட்டுள்ள தமிழ்த் தாயைச் சுற்றிலும் தீயிட்டு எரிப்பது அவர் நோய் போக்கும் மருந்தாகுமா என்பதை கவனிக்க.
 
தமிழ்மக்களே உங்களைத் தமிழ் மக்கள் என்று அழைக்கச் செய்திருப்பது எது?  அதை நினையுங்கள்.  அதை மறந்து ஆற்றப்படுந் தொண்டுகள் கடைக்காலில்லாமல் எழுப்பப்படும் கட்டடம் போன்றவையாகும்.  நீங்கள் எத்தொண்டு செய்யினும் அத்தொண்டின் அடிப்படையில் தமிழ் வேட்கை எழுச்சி இருத்தல் வேண்டும்.  அவ்வேட்கையால் உங்களைப் பலவாறு பிரித்துப் பிளக்க உங்கள் பால் இடைநாளில் தோன்றிய சாதிமதப் பூசல்கள் உங்களை விடுத்து இரிந்து ஓடும் அவ்வாற்றல் அமிழ்தினும் இனிய தமிழ் வேட்கைக்கு உண்டு என்பவை மறவாதேயுங்கள்.

No comments:

Post a Comment