தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

3.10.12

பெரியாழ்வாரை அறிவோம்

பெரியாழ்வார் வரலாறு
பாண்டிய நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரிலே தோன்றியவர்.  பெரியாழ்வார் திருமொழி, திருப்பல்லாண்டு ஆகிய நூல்களை உலகுக்குத் தந்தவர்.  விஷ்னு சித்தன் , பட்டர் பிரான் என்ற சிறப்புப் பெயர்களைக் கொண்டவர்.  ஆண்டாளை வளர்த்தவர்.
இறைவனுக்குப் பூ மாலை சூட்டுவதை வழக்கமாகக் கொண்ட இவர் பாமாலையும் சூட்டி மகிழ்ந்தார்.
கண்ணனின் அழகினை அழகாக வருணித்துப் பாடியுள்ளார். 
“சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் யசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாத கமலங்கள் காணீரோ
பவள வாயீர் வந்து காணீரோ!
என்ற பாடல் மூலம் கண்ணனின் பாதங்களை, அதன் அழகைக் கண்டு மயங்குமாறு வேண்டுகிறார்.
கண்ணனின் பிறப்புக்காக அகமகிழ்ந்து பத்துப் பாடல்கள் இயற்றியுள்ளார்.  அப்பாடல்களில் கண்ணனுடைய புருவங்கள், நெற்றி, மார்பு, வயிறு, கழுத்து, முடி, குழை, துடை, கைகள் என அவனுடைய அங்கங்களை,  மகிழ்ந்து பாடுகிறார்.
கண்ணனை உறங்கச் செய்வதற்காக வேண்டி பாடலையும் பாடியிருக்கிறார்.  இவர் பாடிய இப்பாடல் தான் தற்போது பாடப்படும் தாலாட்டுக்கு வழிவகுத்தது என்பர்.  குழந்தைகளை வர்ணிப்பதில் இவருக்கு நிகர் இவரே.
கண்ணனும் யசோதையும்:
கண்ணனைப் பற்றி புனைந்துரைத்த பெரியாழ்வார், கண்ணனின் தாய் யசோதை கொள்ளும் பெருமிதத்தை எடுத்துரைக்கிறார்.  கண்ணன் ஆநிரை மேய்த்துத் திரும்பும் போது அவனைத் தாயானவள் மிகவும் பெருமிதத்துடன் வரவேற்கிறாள்.  இருந்த போதிலும் இச்சிறு வயதில் இவ்வாறு உன்னை அனுப்புவதற்கு எனக்கு மனமில்லை என்று வருந்தி நாளை முதல் நீ இல்லிலேயே இருந்துவிடு என்று அன்போடு கூறுகிறாள்.  பெரியாழ்வார் திருமொழியில் கண்ணனைப் பற்றிய பல பாடல்களைப் பாடியுள்ளார்.

இவ்வாறு பெரியாழ்வார் படைத்த கண்ணன் பற்றிய பாடல்கள் இன்றளவும் அனைவராலும் உய்த்துணரத்தக்கதாக உள்ளது.  பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதியாத்த இப்பாடல்கள் இன்றும்  நம்மை மெய்மறக்கச் செய்து நிற்கின்றன.

1 comment:

  1. அருமையான பதிவு. வாழ்த்துகள்

    ReplyDelete